மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெற்று விட்டனர். இந்த நிலையில் இருவரும் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பையில் விளையாட ஆர்வமாக இருக்கிறார்கள்.
ஆனால் இந்திய அணி அடுத்த ஆறு மாதங்களில் பெரிய அளவு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வில்லை. இது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் உடல் தகுதியை கேள்விக்குறியாக்கும். இந்த நிலையில் இருவரின் எதிர்காலம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், நாம் அனைவரும் தொழில் முறை கிரிக்கெட் வீரர்கள் பற்றி பேசுகிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் குறிக்கோள் தற்போது கிரிக்கெட் மீது மட்டும்தான் இருக்கும். ஆனால் இருவருக்கும் உள்ள மிகப்பெரிய சவாலே தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதும்,உடல் தகுதியுடன் இருப்பது மட்டும்தான்.
விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடுவார். அதை தவிர ஏதேனும் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் அதில் விளையாடுவார்.இந்த தொடரில் எல்லாம் விளையாடி எதையும் அவர் நிரூபிக்க தேவையில்லை. தற்போது டி20 போட்டிகள் தான் அதிக அளவு நடைபெறுகிறது. ஒரு நாள் போட்டி குறைவாகவே நடக்கிறது. எனவே இதுதான் கோலியும், ரோகித் சர்மாவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி தங்களது உடல் தகுதியை பார்த்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து இருவரும் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடினால் 2027 உலக கோப்பை என்பது பெரிய பிரச்சினை கிடையாது. ஆனால் இருவருக்கும் கடும் நெருக்கடி இருக்கும். ரோஹித் சர்மாவிடம் இது குறித்து பேசினேன். அவர் உடல் தகுதியை பாதுகாப்பதில் மிகவும் தீவிரமாக இருக்கின்றார். விராட் கோலி, இங்கிலாந்தில் நேரம் கிடைக்கும்போது எல்லாம் பயிற்சி செய்து வருகின்றார்.
சமி கூட தொடர்ந்து விளையாடும் முடிவில் தான் இருக்கின்றார். இந்த சமயத்தில் தேர்வு குழுவினரும், பயிற்சியாளரும், விராட் கோலி ரோகித் சர்மா உடன் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும். நாங்கள் என்ன எதிர்பார்க்கின்றோம் என்பதை தெரியப்படுத்த வேண்டும். 2027 உலக கோப்பைக்கு இன்னும் சில ஆண்டுகள் இருக்கின்றது.
ஆனால் இந்திய அணி தற்போது பெரிய அளவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டி, அதன் பிறகு ஐபிஎல் என மிகப் பெரிய கேப் இருக்கின்றது. தொடர்ந்து விளையாடாமல் இருப்பது தான் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என நினைக்கிறேன் என்று இர்ஃபான் பதான் கூறியுள்ளார். இந்திய அணிக்கு வரும் அக்டோபர் 19ஆம் தேதி தான் ஆஸ்திரேலியா எதிராக மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் தொடங்குகிறது.