சிட்னி: இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி-யின் ஃபார்ம் குறித்து கடந்த சில நாட்களாக பேசாத கிரிக்கெட் ரசிகர்களே இல்லை. அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மிக மோசமான ஃபார்மில் இருந்தனர். 2024 டி20 உலகக் கோப்பையை நீக்கிவிட்டு பார்த்தால் அவர்கள் இருவரும் எந்த இருதரப்பு கிரிக்கெட் தொடர்களிலும் சரியாக விளையாடவில்லை.
குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளனர். அவர்களின் ஈகோவும், நம்மை யார் அணியை விட்டு நீக்குவார்கள்? என்கிற கர்வமும் தான் காரணம் என விமர்சகர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வரும் வரை அவர்களது எண்ணத்திற்கு எந்த ஆபத்தும் இன்றி இருந்தது.

ஆனால், கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதற்கு காரணமே அடுத்த தலைமுறை வீரர்களை வளர்த்து எடுப்பதற்காகத்தான். அதனால், அவர் மூத்த வீரர்களை இரண்டாம் பட்சமாகவே அணுகியதாக தெரிகிறது. அதுதான் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் கர்வத்திற்கு ஆபத்தாக மாறியும் இருக்கிறது. ஒரு வகையில் அது அவர்களது தன்னம்பிக்கையை உடைத்தும் இருக்கலாம்.
சரியாக கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வந்த அதே நேரத்தில் தான் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை இல்லாத வகையில் முக்கிய டெஸ்ட் சீசனுக்கு முன்னதாக துலீப் டிராபி என்னும் உள்ளூர் டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் அணி வீரர்களை விளையாட வைக்கும் முடிவை எடுத்தது.
ரோஹித் சர்மா, விராட் கோலி என அனைத்து மூத்த வீரர்களும் அந்த தொடரில் விளையாடுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் துலீப் டிராபியில் விளையாடப் போவதில்லை என்ற அறிவிப்பு வெளியானது. மூத்த வீரர்களான தாங்கள் ஏன் இளம் வீரர்களுடன் உள்ளூர் தொடரில் விளையாட வேண்டும்? என்பதாலேயே அவர்கள் கடைசி நேரத்தில் விலகினர்.
ஆனால், அப்போதும் எந்த டெஸ்ட் அணி பேட்ஸ்மேனை விடவும், இவர்கள் இருவரது ஃபார்ம் தான் மிக மோசமாக இருந்தது. இப்போதும் அப்படிதான் இருக்கிறது. இருவரும் துலீப் டிராபி தொடருக்கு பின் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலே தடுமாற்றத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ஆனாலும், அந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் அதிரடி ஆட்டத்தை ஆடி அதை சமாளித்தனர்.
அதே போன்ற சூழ்நிலை அடுத்து நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அமையவில்லை. அந்தத் தொடர்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பலவீனம் வெட்ட வெளிச்சமானது. தான் செய்யும் எந்த தவறையும் எத்தனை முன்னாள் வீரர்கள் சுட்டிக்காட்டினாலும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என அந்த தொடர்களில் விராட் கோலி பிடிவாதமாக ஆடியதை போலத்தான் இருந்தது.
மறுபுறம் ரோஹித் சர்மா முற்றிலுமாக தன்னம்பிக்கை இழந்த ஒரு நபரைப் போலத்தான் பேட்டிங் செய்தார். டெஸ்ட் போட்டியை எப்படி ஆட வேண்டுமோ, அப்படி அவர் ஆடவில்லை. அது ஏன் என்பதும் யாருக்கும் புரியவில்லை. உள்ளூர் போட்டியில் விளையாட மாட்டோம், எந்த உள்ளூர் தொடரிலும் விளையாட மாட்டோம். எங்களை அணியை விட்டு நீக்க முடியாது என்ற எண்ணத்தோடு இருக்கும் அவர்கள் இருவரும் தங்களின் பேட்டிங் சரியில்லை என்ற நிலை ஏற்படும் போது தங்களது நிலைப்பாட்டை விட்டுக் கொடுத்து மற்றவர்களின் ஆலோசனைகளை அணுகியிருக்கலாம்.
ஆனால், மீண்டும் மீண்டும் ஒரே தவறை அவர்கள் செய்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தது தான் மோசமானதாக அமைந்தது. இனியும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் அணியில் தொடர்ந்து விளையாட வேண்டும் என நினைத்தால் நிச்சயமாக தங்களின் ஈகோவை கைவிட்டு உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தங்களின் ஃபார்மை நிரூபிக்க வேண்டும். ஆனால், அது நடப்பதற்கான சாத்தியம் இல்லை.