டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு துருவமாக கருதப்பட்ட விராட் கோலியும், கங்குலியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டு பரஸ்பரமாக மரியாதை செலுத்திக்கொண்ட காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
டெல்லியில் நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இதில் 182 ரன்களை வெற்றி இலக்காக ஆர் சி பி அணி நிர்ணயித்தது. இதில் விராட் கோலி 7000 ரன்களை ஐபிஎல் தொடரில் அடித்தார்.
இந்த நிலையில் மீண்டும் பேட்டிங் செய்த டெல்லி அணி 16.4 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. இந்த நிலையில் அனைவரின் கண்களும் விராட் கோலியும் கங்குலியும் என்ன செய்யப் போகிறார்கள் என்பது மீதே இருந்தது. ஏனென்றால் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இரு அணிகளும் மோதியபோது விராட் கோலியும், கங்குலியும் கை கொடுத்துக்கவே இல்லை.

மேலும் கங்குலியை விராட் கோலி கண்டு கொள்ளவே இல்லை. இருவரும் அதன் பிறகு இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்திக் கொண்டனர். இதனால் இதுவரைக்கும் இடையிலான விரிசல் அதிகமாகி இருக்கலாம் என கருதப்பட்டது. இதனால் மீண்டும் அவர்கள் கைகுலுக்காமல் சென்று விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அனைவரும் எதிர்பார்ப்பையும் சுக்குநூறாக உடைக்கும் வகையில் விராட் கோலியும் கங்குலியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கைகுலுக்கி அன்பை பரிமாறி கொண்டனர். இதில் கங்குலி விராட் கோலியின் தோளில் கையை போட்டு வாழ்த்து கூற, அதற்கு விராட் கோலி மரியாதையாக பதில் அளித்து கங்குலியின் தோளில் கை போட்டு அன்பை பரிமாறினார்.
இந்த காட்சியை பார்க்கும் போது இருவருக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக விளங்கும் விராட் கோலியும், கங்குலியும் மீண்டும் இணைவது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.