ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் சேர்த்திருந்தது. அதில் விராட் கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்கம் முதலே விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் விராட் கோலி சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விராட் கோலி கவனமாக ஆடி வந்தார். 97 ரன்களில் இருந்த போது, கேப்ரியல் வீசிய பந்தில் பவுண்டரி விளாசி சதத்தை விளாசினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 29வது சதமாகும். அதேபோல் 500வது சர்வதேச போட்டியில் ஆடிய வீரர்களிலேயே, சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார்.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் 76 சதங்களில் விரைவாக விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் மட்டுமே விராட் கோலியை விட அதிக சதங்களை விளாசி இருக்கிறார். அதேபோல் கடந்த 5 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் விராட் கோலி அடிக்கும் முதல் சதம் இதுவாகும். அதேபோல், சதம் விளாசிய பின் சுப்மன் கில் ஸ்டைலில் அனைவருக்கும் தலைவணிங்கி நன்றி கூறினார். இதனால் இந்திய ஓய்வறையில் அனைத்து வீரர்களும் உற்சாகமடைய, விராட் கோலி அதிக சிரிப்புடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

அதேபோல் சமகாலத்தில் அதிக சதங்களை விளாசிய வீரர்களில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 46 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், 45 சதங்களுடன் டேவிட் வார்னர் 3வது இடத்திலும், 44 சதங்களுடன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரோகித் சர்மா 4வது இடத்திலும் உள்ளனர்.