மும்பை: மும்பையில் பெய்த மழையால் கிரிக்கெட் பயிற்சி திடீரென ரத்து செய்யப்பட, ப்ளே ஸ்டேஷனுக்குச் சென்று தனக்குப் பிடித்த வீடியோ கேமை விளையாடி மகிழ்ந்துள்ளார் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி.
கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
முதல் டெஸ்ட் ஜூலை 21-ந்தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் 30-ந்தேதியும், 3-வது டெஸ்ட் ஆகஸ்ட் 9-ந்தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் 18-ந்தேதியும் தொடங்குகிறது. இதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய அணி ஜூலை 6-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டுச் செல்கிறது.
இந்திய அணி டி20 உலகக்கோப்பை போட்டிக்குப்பிறகு ஐ.பி.எல். தொடரில் விளையாடியது. அதன்பின் கோஹ்லி, ரோகித் சர்மா, தவான், ரஹானே, அஸ்வின் முக்கிய வீரர்களுக்கு ஜிம்பாப்வே தொடரில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கோஹ்லி கடந்த 29-ந்தேதிக்குப்பின் சுமார் 18 நாட்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இன்னும் 18 நாட்களே இருக்கும் நிலையில் விராட் நேற்று முன்தினம் தனது பயிற்சியை துவக்கினார்.
ஆனால், கோஹ்லி தனது பயிற்சியைத் தொடர முடியாமல் மழை குறுக்கிட்டது. மும்பையில் மழை பெய்ததால், இன்றைய பயிற்சி ரத்து செய்யப்பட்டது. இதனால், மகிழ்ச்சியடைந்த கோஹ்லி பிளே ஸ்டேஷனுக்குச் சென்று தனக்குப் பிடித்தமான வீடியோ கேமை விளையாடி உள்ளார்.
இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார் கோஹ்லி.