மும்பை: இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா உள்ளிட்டோர் தங்களது ஃபிட்னஸ் சோதனைக்காக பெங்களூர் வந்த நிலையில், விராட் கோலிக்கு மட்டும் லண்டனிலேயே ஃபிட்னஸ் டெஸ்ட் நடத்தப்பட்டிருப்பது ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு கூட இந்தியா வர மாட்டாரா என்றும் விராட் கோலியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதமாக இந்திய அணி வீரர்கள் ஓய்வில் இருக்கும் நிலையில், செப்டம்பர் 9ஆம் தேதி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் அனைவரும் மீண்டும் பயிற்சியை தொடங்கி இருக்கின்றனர்.

ஏற்கனவே காயத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ், பும்ரா உள்ளிட்டோர் பயிற்சியை தொடங்கினர். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பாக இந்திய வீரர்கள் அனைவருக்கும் யோ யோ டெஸ்ட் எனப்படும் ஃபிட்னஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, சுப்மன் கில் உள்ளிட்ட பலரும் மும்பையில் இருந்த நிலையில், இதற்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்தனர்.
ரோகித் சர்மா தொடங்கி ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர், ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, சர்ஃபராஸ் கான், அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா உள்ளிட்ட பலரும் இந்த ஃபிட்னஸ் டெஸ்டில் பங்கேற்று தேர்ச்சி பெற்றனர். 2வது கட்டமாக காயத்தில் உள்ள கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா, ஆகாஷ் தீப், நிதீஷ் ரெட்டி பங்கேற்க உள்ளனர்.
இதனால் விராட் கோலியும் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அவர் குடும்பத்துடன் லண்டனில் செட்டிலாகிவிட்ட நிலையில், ஃபிட்னஸ் சோதனைக்கு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வர வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் அவருக்கு மட்டும் ஃபிட்னஸ் டெஸ்ட் லண்டனிலேயே நடத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விராட் கோலி விளையாடி வருகிறார். ஆனால் விராட் கோலிக்கு கூடுதல் சலுகையை பிசிசிஐ அளித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணிக்காக ஆடி வரும் மற்ற வீரர்கள் அனைவரும் பெங்களூர் வந்த போது, விராட் கோலி மட்டும் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரா என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.