ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எது நடக்கிறதோ இல்லையோ போட்டி முடிந்ததும் தோனியிடம் இளம் வீரர்கள் அறிவுரை கேட்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் டியூஷன் செல்வது போல் அனைத்து வீரர்களும் ஆட்டம் முடிந்தவுடன் தோனியிடம் சென்று தங்களுடைய சந்தேகத்தை கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தோனியின் சிஷ்யனான விராட் கோலி தற்போது அதேபோல் இளம் வீர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். ஆர் சி பி, ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆனார். இந்த நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் ஜெயஸ்வாலுக்கு விராட் கோலி பேட்டிங் தொடர்பாக சில நுணுக்கங்களை அறிவுரைகளாக வழங்கினார்.
ஜெய்ஸ்வாலை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் விராட் கோலி உடனான இந்த ஆலோசனை அவருக்கு நிச்சயம் நல்ல பலனை கொடுத்து இருக்கும். இந்த நிலையில் விராட் கோலியை பிடிக்காத சிலர் இந்த செயலை கிண்டல் அடித்து வருகிறார்கள். விராட் கோலியே பேட்டிங்கில் தற்போது தடுமாறி வரும் நிலையில் அவர் ஏன் இளம் வீரர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார் என்று கேள்வி கேட்டுள்ளனர்.
விராட் கோலிக்கு சுழற் பந்து வீச்சு விளையாட தெரியாமல் திணறி வருவதாகவும் அவருடைய ஸ்ட்ரைக் ரெட் வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள ரசிகர்கள், தோனியை பார்த்து காப்பியடிக்காமல் முதலில் அவர் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு கோலி ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 75 சதங்கள் அடித்து இருப்பதாகவும் இந்த சரிவில் இருந்து அவர் மீண்டு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.