கொரோனா பாதிப்பு
ஐபிஎல் 2021 தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஆர்சிபி கேப்டன் விராட் கோலி மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். வீடு திரும்பிய அவர் தொடர்ந்து ஓய்வெடுக்காமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்டு வருகிறார்.
ரூ.2 கோடி நிதியுதவி
முன்னதாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்து இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு 2 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளனர். மேலும் கொரோனா பாதித்தவர்களுக்கு நிதியுதவி செய்ய மற்றவர்களுக்கும் கோரிக்கை விடுத்தனர்.
ரூ.3.6 கோடி நிதி
தொடர்ந்து க்ரௌட் பண்டிங் மூலம் அடுத்த 24 மணிநேரத்தில் 3.6 கோடி ரூபாய் நன்கொடைகள் திரட்டியுள்ளதாகவும் அறிவித்திருந்தனர். மக்களின் உடனடி ஆதரவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் விராட் கோலி தன்னுடைய கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளார்.
விராட், இஷாந்த் முதல் டோஸ்
இதுகுறித்து அவர் தனது வலைபக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் பொதுமக்கள் அனைவரும் எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மாவும் தன்னுடைய கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டுள்ளார்.
அனைவருக்கும் நன்றி
அவரும் பொதுமக்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த நேரத்தில் முக்கிய பணிகளில் உள்ளவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். முன்னதாக விராட் கோலியும் முக்கிய பணிகளில் உள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.