ட்ரினிடாட்: இந்திய அணிக்காக பேட்டிங் செய்யும் போது, நான் எவ்வளவு ரன்கள் சேர்த்தேன் என்பதைவிடவும், நான் ஏற்படுத்திய தாக்கம் எவ்வளவு என்பதே முக்கியம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 29வது சதத்தை விளாசி விராட் கோலி அசத்தியுள்ளார். இதன் மூலம் 5 ஆண்டுகளுக்கு பின் வெளிநாட்டு மைதானத்தில் விராட் கோலி சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 500வது போட்டியில் களமிறங்கி சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். சிறப்பாக ஆடிய அவர், 121 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால், ரசிகர்கள் பலரும் இரட்டை சதத்தை மிஸ் செய்துவிட்டதாக சோகமடைந்தனர்.

இந்த நிலையில் 2ஆம் நாள் ஆட்டத்திற்கு பின் விராட் கோலி பேசுகையில், நான் எப்படி விளையாட வேண்டும் என்று நினைத்தேனோ, அப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். எப்போது களத்தில் அதிக பிரஷர் இருக்கிறதோ, அதனை வாய்ப்பாகவே கருதி வந்திருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பிரஷரான சூழலில் தான், எனது சிறந்த பங்களிப்பை கொண்டு வந்திருக்கிறேன். நான் களமிறங்கிய போது, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் சிறந்த இடங்களில் பந்துவீசிக் கொண்டிருந்தார்காள். அதனால் எனக்கான நேரத்தை எடுத்துக் கொண்டேன். மைதானமும் அவ்வளவு வேகமாக இல்லை.
5 ஆண்டுகளுக்கு பின் வெளிநாட்டில் சதம் அடித்திருப்பது பற்றி நான் பேசத் தேவையில்லை. நான் மொத்தமாக 15 சதங்களை வெளிநாடுகளில் விளாசி இருக்கிறேன். அதுவொன்றும் மோசமான ரெக்கார்ட் அல்ல. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இந்திய மண்ணை விடவும் அதிக சதங்களை வெளிநாடுகளிலேயே விளாசி இருக்கிறேன். நாங்கள் 30 போட்டிகளை கூட வெளிநாடுகளில் ஆடவில்லை. அதேபோல் ஏராளமான அரைசதங்களும் வெளிநாட்டு மண்ணில் விளாசி இருக்கிறேன். நான் அரைசதம் விளாசினால், சதத்தை மிஸ் செய்துவிட்டதாக சொல்வார்கள்.
ஒருவேளை 120 ரன்களில் ஆட்டமிழந்தால், இரட்டை சதத்தை மிஸ் செய்துவிட்டதாக பேசுவார்கள். இந்த 15 ஆண்டுகளில், ரெக்கார்ட்ஸ், மைல்கல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததே இல்லை. எனது பேட்டிங் மூலம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தினேன் என்பதே அனைவருக்கும் நினைவில் இருக்கும். அதேபோல் 500 போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 500 போட்டிகள் ஆடுவேன் என்று கற்பனை கூட செய்ததில்லை. அதேபோல் சிங்கிள் ரன் ஓடுகையில், அதனை 2 ரன்களாக மாற்றுவதற்கான வாய்ப்பை மிஸ் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.