ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 121 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. விராட் கோலி 87 ரன்களுடன் களத்தில் இருந்ததால், நிச்சயம் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை விராட் கோலி நிதானமாகவே தொடங்கினார்.

வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களான ஹோல்டர், கேப்ரியல், வேரிக்கன் என்று எந்த பந்துவீச்சாளரும் விராட் கோலிக்கு சின்ன அச்சுறுத்தலை கூட அளிக்கவில்லை. அந்த அளவிற்கு சீரான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தினார். இந்த நிலையில் 97 ரன்கள் எடுத்திருந்த போது, தனது ஆஸ்தான ஸ்டைலில் பவுண்டரி விளாசி விராட் கோலி சதம் அடித்தார்.
76வது சதத்தை விளாசிய மகிழ்ச்சியில் சுப்மன் கில் ஸ்டைலில் விராட் கோலி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதன் பின் விராட் கோலியின் பேட்டிங்கில் வேகம் கூடியது. அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி கியரை மாற்றினார். ஆனால் 121 ரன்கள் எடுத்திருந்த போது ஒரே ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் அல்ஜாரி ஜோசப் வீசிய த்ரோ நேராக ஸ்டம்பை பதம் பார்க்க, விராட் கோலி 121 ரன்களுக்கு ரன் அவுட்டாகி ஆட்டமிழந்து வெளியேறினார். பெவிலியன் திரும்பும் போது மிகுந்த ஏமாற்றத்துடன் விராட் கோலி காணப்பட்டார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ரன் அவுட்டாவது இது 3வது முறையாகும். ரன் ஓடிய போது, விராட் கோலிக்கு ஏற்பட்ட சிறிய தயக்கமே ரன் அவுட்டிற்கு காரணமாக அமைந்தது.
விராட் கோலியின் மிகுந்த உறுதியுடன் காணப்பட்டதால், நிச்சயம் இரட்டை சதம் விளாசுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். அதேபோல் 195 ரன்கள் விளாசி இருந்தால் விராட் கோலியின் டெஸ்ட் பேட்டிங் சராசரி 50.00ஆக உயர்ந்திருக்கும். இவை இரண்டையும் செய்யாமல் விராட் கோலி ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். மேலும், உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 373 ரன்களுடன் களத்தில் உள்ளது.