மும்பை: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்று விளையாடிய முதல் ஒருநாள் தொடரிலேயே இந்திய அணி தோல்வியை அடைந்தது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இது ஒரு பக்கம் இருக்க, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 3 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 24, 14 மற்றும் 20 என்று மொத்தமாக 58 ரன்களை மட்டுமே விராட் கோலி சேர்த்தார். 3 போட்டிகளிலும் ஸ்பின்னர்களிடம் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதுமட்டுமல்லாமல் 3 போட்டிகளிலும் எல்பிடபிள்யூ முறையில் விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறியது அவரின் தடுப்பாட்டம் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி தேர்வு செய்யப்பட்ட போது, ஒருநாள் கிரிக்கெட் 14 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனை படைக்க 128 ரன்கள் தேவையாக இருந்தது.
அதனை ஒரே போட்டியில் விராட் கோலி செய்வார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் 3 போட்டிகளிலும் சேர்த்து கூட விராட் கோலியால் 128 ரன்களை அடிக்க முடியவில்லை. இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் பலரும் சோகமடைந்துள்ளனர். இந்த சாதனையை படைக்க விராட் கோலி 6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் அடுத்ததாக டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே இந்திய அணி கவனம் செலுத்தவுள்ளது. வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா சென்று டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
அதன்பின் பார்டர் - கவாஸ்கர் டிராபி நடப்பதால், இந்திய அணி ஜனவரி மாத இறுதியில் தான் அடுத்ததாக ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதனால் விராட் கோலிக்கு கிடைத்த சான்ஸை மிஸ் செய்துவிட்டார் என்று ரசிகர்கள் பலரும் விரக்தியுடன் கூறி வருகின்றனர். சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ளதால், அதன்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி கவனம் செலுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.