பெங்களூர்: 15 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஹசாரே கோப்பை தொடருக்குத் திரும்பிய விராட் கோலி, தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். பெங்களூரு பிசிசிஐ மையத்தில் ஆந்திராவுக்கு எதிராக டெல்லி அணிக்காக அவர் களமிறங்கினார். டாஸ் வென்ற டெல்லி பந்துவீசத் தேர்வு செய்தது.
பந்துவீச்சைத் தொடர்ந்து களமிறங்கிய ஆந்திராவில், முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷேக் ரஷீத் 31 ரன்களும், ரிக்கிபியு 122 ரன்களும் குவித்தனர். கேப்டன் நிதிஷ்குமார் ரெட்டி 23 ரன்களில் ஆட்டமிழக்க, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது.

299 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லிக்கு, இளம் தொடக்க வீரர் பிரியன்ஸ் ஆர்யா அதிரடித் தொடக்கம் அளித்தார். 44 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் விளாசினார். மறுமுனையில் அற்பித் ரானா டக் அவுட் ஆனார்.
இதன்பின் களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி, 101 பந்துகளில் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் குவித்து சதம் அடித்தார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 16000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த 16,000 ரன்கள் மைல்கல்லை 391 இன்னிங்ஸ்களில் எட்டிய நிலையில், விராட் கோலி 330 இன்னிங்ஸ்களிலேயே அதை முறியடித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்குப் பிறகு ஒவ்வொரு 1,000 ரன்கள் மைல்கல்லையும் அதிவேகமாக கடந்த வீரர் என்ற மற்றொரு பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்தோர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 60 சதங்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 58 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட தேர்வுக் குழு வலியுறுத்திய நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா சதமடித்து அதற்குப் பதிலடி கொடுத்தனர்.