லண்டன்: இந்திய அணியின் சூப்பர்ஸ்டார் வீரரான விராட் கோலியை ரன்களை சேர்க்கவிடாமல் தடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் முடிவடைந்து ஒரு வாரமாகியுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரின் கவனமும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பக்கம் திரும்பியுள்ளது. ஐபிஎல் தொடரின் போது விராட் கோலியின் கவனம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பக்கம் திரும்பியது. இதனை வெளிப்படையாகவே விராட் கோலியும் அறிவித்திருந்தார். இன்னொரு பக்கம் ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல் தொடரில் விளையாடாமலேயே இங்கிலாந்தில் பயிற்சியை தொடங்கினார்.

அதன்பின்னர் சசக்ஸ் அணிக்காக ஆடி வந்த புஜாரானுடன் இணைந்து, கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடினார். இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதேபோல் இந்திய அணியின் விராட் கோலி, ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் அபாரமான ஃபார்மில் இருப்பதால், இவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ள கருத்துகள் ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது. அதில், நீண்ட காலமாக சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டராக உள்ளவர் விராட் கோலி. எப்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட விரும்புவார். நிச்சயம் அதிக ரன்களையும் சேர்த்துள்ளார். ஆனால் இந்த வாரத்தில் ரன்களை சேர்க்க விடாமல் விராட் கோலியை தடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 42 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி, இதுவரை 8 சதங்கள், 5 அரைசதங்கள் உட்பட 1,979 ரன்களை குவித்துள்ளார். இன்னும் 21 ரன்கள் விளாசினால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். இதனால் விராட் கோலியின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.