மும்பை: இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை தேர்வுக் குழு நியமிக்க நினைத்தால், விராட் கோலி மீண்டும் வாய்ப்பு வழங்கலாம் என்று தேர்வுக் குழு முன்னாள் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியில் இருந்து திடீரென எம்எஸ் தோனி விலகிய போது, உடனடியாக கேப்டனாக நியமிக்கப்பட்டு இந்திய டெஸ்ட் அணியை கட்டமைத்தவர் விராட் கோலி. இவரது தலைமையின் கீழ் தான் இந்திய அணி வெளிநாடுகளிலும் கோப்பைகளை வெல்ல தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து என்று விராட் கோலி கேப்டன்சியில் அசத்தினார்.

நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியை பார்த்து அந்நாட்டு ரசிகர்களே மிரண்டு போயினர். 68 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய விராட் கோலி, 40 வெற்றி, 11 டிரா என்று வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தார். ஆனால் கடந்த தென்னாப்பிரிக்கா தொடருக்கு பின் திடீரென டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி விலகினார்.
இதன் காரணமாக பிசிசிஐ வேறு வழியின்றி ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தது. ஆனால் ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் கேப்டன்சி பெரியளவில் கைகூடவில்லை. அதுபோக காயமும் அவருக்கு பெரும் சோதனையாக அமைந்தது. இதன் காரணமாக பிசிசிஐ தரப்பில் புதிய கேப்டனை நியமிக்க ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கி வரும் சூழலில், ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கும் உலகக்கோப்பைக்கு பின் ஹர்திக் பாண்டியா தலைமையேற்க வாய்ப்புள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு யாரை கேப்டனாக நியமிப்பது என்று தெரியாமல் பிசிசிஐ திணறி வருகிறது. ஏனென்றால் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனால் வேறு வழியில்லாமல் துணைக் கேப்டனாக அஜிங்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சி பிரச்சனைக்கு முன்னாள் தேர்வுக் குழு தலைவை எம்எஸ்கே பிரசாத் ஆலோசனை ஒன்றை கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து எம்எஸ்கே பிரசாத் பேசுகையில், இந்திய அணியின் தேர்வுக் குழு என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ரோகித் சர்மா கேப்டன்சியில் இருந்து விலகினால் விராட் கோலியை நியமிக்கலாம்.
ஒருவேளை டெஸ்ட் கேப்டன்சியை மாற்ற தேர்வுக் குழுவினர் எண்ணினால், விராட் கோலியால் இந்திய அணியை சிறப்பாகவே தலைமை தாங்க முடியும். ஆனால் மீண்டும் கேப்டன்சி பொறுப்பை ஏற்பது தொடர்பாக விராட் கோலி என்ன நினைக்கிறார் என்பது தெரியவில்லை. ஒருவேளை புதிய கேப்டனை தேர்வுக் குழு நியமிக்க நினைத்தால், நிச்சயம் விராட் கோலி அந்த பொறுப்பை ஏற்கலாம் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.