ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வாவின் தாய், விராட் கோலியும் எனக்கு மகன் தான் என்று ஆனந்த கண்ணீருடன் கூறிய வீடியோ ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1980களில் சர்வதேச கிரிக்கெட்டில் தனி ராஜாங்கமே நடத்தினார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விவியன் ரிச்சர்ட்ஸ். என்னதான் சுனில் கவாஸ்கர் பேட்டிங்கில் சதங்களாக விளாசி சாதனை படைத்தாலும், இந்திய ரசிகர்களும் விவியன் ரிச்சர்ட்ஸை கொண்டாடினர். விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தை பார்ப்பதை தங்களின் வாழ்க்கை கனவாக கூட பல ரசிகர்கள் கொண்டிந்தனர். அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மூலம் கொண்டாட்டத்தை கொடுத்தார்.

தற்போது ரிச்சர்ட்ஸ் இருந்த இடத்தில் இந்திய கிரிக்கெட்டிங் கிங் விராட் கோலி இருக்கிறார். விராட் கோலி எங்கு விளையாடினாலும், அவரின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் கூடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக வெஸ்ட் இண்டீஸில் விளையாடி வரும் விராட் கோலியை சந்தித்து ஏராளமானோர் அன்பை வெளிக்காட்டி வருகின்றனர். விராட் கோலியிடம் இருந்து கிடைக்கும் ஒரு ஆட்டோகிராஃப், ஒரு செல்ஃபி கூட வெஸ்ட் இண்டீஸ் மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வாவின் தாய், விராட் கோலியின் ஆட்டத்தை நேரில் பார்ப்பதற்காக ட்ரினிடாட் மைதானம் வந்தார். இதனை களத்திலேயே ஜோஷ்வா சில்வா விராட் கோலியிடம் சொல்லி மகிழ்ச்சியடைந்தார். இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்திற்கு பின், விராட் கோலியை சந்திப்பதற்காக இந்திய வீரர்களின் பேருந்து முன் ஜோஷ்வா சில்வா மற்றும் அவரது தாய் காத்திருந்தனர்.
இதனையறிந்த விராட் கோலி, உடனடியாக அவர்களை சந்தித்தார். அப்போது விராட் கோலியை கட்டியணைத்து, முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார். அதேபோல் விராட் கோலியின் ஆட்டத்தை பாராட்டியதோடு, இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படத்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோஷ்வா சில்வா எடுத்தார். இந்த சந்திப்புக்கு பின் அவரின் ஆனந்த கண்ணீர் சிந்தியது இது சுற்றியிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சந்திப்புக்கு பின் ஜோஷ்வா சில்வாவின் தாய் கரோலின் பேசுகையில், நானும், ஜோஷ்வாவும் விராட் கோலியின் தீவிர ரசிகர்கள். இந்த காலத்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் விராட் கோலியும் ஒருவர். எங்கள் மண்ணில் அவர் விளையாடுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவருடன் ஜோஷ்வாவும் களத்தில் விளையாடுவது பெருமையாக இருக்கிறது.
விராட் கோலி சதமடித்த தருணம் உற்சாகத்தை கொடுத்தது. விராட் கோலியை சந்தித்தது வாழ்வின் சிறந்த தருணம். விராட் கோலியை பிடிக்க ஏராளமான காரணங்கள் உள்ளன. கிரிக்கெட்டை புரிந்து கொண்ட விதம், களத்தில் விராட் கோலியின் பொறுமை என்று ஏராளமானவை உள்ளன. அவரிடமிருந்து ஜோஷ்வாவும் ஏராளமானவற்றை கற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். இவரின் வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.