மும்பை: சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராம் மூலமாக அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 3வது இடத்தில் இருக்கிறார்.
சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட்டின் முகமாக விராட் கோலியே இருக்கிறார். ஃபார்மில் இருந்தாலும், இல்லையென்றாலும் விராட் கோலியை பற்றி பேச்சுகளும், விவாதங்களும் ஓய்ந்தபாடில்லை. கிரிக்கெட்டின் எந்தப் பக்கம் திரும்பினாலும் விராட் கோலி, எந்த சாதனை முறியடிக்கப்பட்டாலும் விராட் கோலி தான். அந்த அளவிற்கு சர்வதேச கிரிக்கெட் விராட் கோலியை சுற்றி இயங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக விராட் கோலியை இன்ஸ்டாகிராம் தளத்தில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 256 மில்லியனுக்கும் அதிகமானோர் விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர். இதன் மூலம் கற்பனைக்கு எட்ட முடியாத வருமானத்தை விராட் கோலி ஈட்டி வருகிறார்.
அதாவது விராட் கோலி பதிவிடும் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.11.25 கோடி வருமானம் ஈட்டி வருகிறார். 2022ஆம் ஆண்டு விராட் கோலி ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டிற்கு ரூ.3.25 கோடி வரை மட்டுமே வருமானம் ஈட்டி வந்தார். தற்போது 2023ஆம் ஆண்டின் 8 மாதத்திலேயே இன்ஸ்டாகிராமின் ஒரு பதிவிற்கான வருமானம் ரூ.8 கோடி வரை உயர்ந்துள்ளது.

இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வீரர் என்பதை விடவும், இன்ஸ்டாகிராம் மூலம் உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் ஆண்கள் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தில் இருகிறார். இதில் விளையாட்டு வீரர்கள் என்று எடுத்துக் கொண்டால் விராட் கோலிக்கு மேல் நட்சத்திர கால்பந்து வீரர்களான லயோனல் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் இருக்கின்றனர்.
உலகிலேயே 600 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை வைத்துள்ள ரொனால்டோ, ஒரேயொரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.26.7 கோடி வருமானம் ஈட்டி வருகிறார். அதேபோல் கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.21.5 கோடி வருமானம் ஈட்டுகிறார். மேலும், இந்தியாவில் விராட் கோலிக்கு பின் அதிக வருமானம் ஈட்டும் நபராக நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார். அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.4.4 கோடி வருமானம் ஈட்டுவது குறிப்பிடத்தக்கது.