ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை.. ஜாம்பவான்கள் சச்சின், டிராவிட் வரிசையில் இணைந்த விராட் கோலி
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி புதிய மைல்கல் சாதனை ஒன்றை எட்டினார். இந்தப் போட்டியில் களம் இறங்கியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300 இன்னிங்ஸ்களில் விளையாடிய 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன் இந்திய அளவில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், முகமது அசாருதீன் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். உலக அளவில் சச்சின் டெண்டுல்கர் 452 இன்னிங்ஸ்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் சனத் ஜெயசூரியா (433), மகிளா ஜெயவர்த்தனே (418) ஆகியோர் உள்ளனர்.

இதே உலக அளவிலான சாதனைப் பட்டியலில் விராட் கோலி கங்குலியுடன் 12 இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். தற்போது தனது 312-வது ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள கோலி, இதுவரை 58.71 சராசரியுடன் 14,797 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 93.82 ஆகும்.
தனது 300 இன்னிங்ஸில் விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் நெருக்கடியால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
பின்னர் அனுபவ வீரர் ஜோ ரூட் (76) மற்றும் லியாம் டாசன் (68) ஜோடி பொறுப்புடன் விளையாடி 7-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணி 258 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது.
இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் 62 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சிறந்த பந்துவீச்சு பதிவாகும். ஜஸ்பிரித் பும்ரா 9 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இளம் வீரர் குர்னூர் பிரார் 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications

