துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். குறிப்பாக, ராஞ்சி ஒருநாள் போட்டியில் சதமடித்து மிரட்டிய விராட் கோலி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். அதேசமயம், ரோஹித் சர்மா தொடர்ந்து அசைக்க முடியாத வகையில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்களின் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ராஞ்சி போட்டியில் 120 பந்துகளில் 135 ரன்கள் குவித்து, தனது 52-வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார் விராட் கோலி. இந்த அபார ஆட்டத்தின் மூலம், ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 37 வயதான விராட் கோலி தற்போது 751 புள்ளிகளுடன் உள்ளார்.
அதேவேளையில், கழுத்து வலி காரணமாக இந்தத் தொடரில் விளையாடாத சுப்மன் கில் ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரை விராட் கோலி முந்தியுள்ளார்.
ரோஹித் சர்மா 783 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ராஞ்சி போட்டியிலும் அவர் அரைசதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 9-வது இடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், ராஞ்சி போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சு: ஜஸ்பிரித் பும்ரா 879 புள்ளிகளுடன் தொடர்ந்து நம்பர் 1 பந்துவீச்சாளராக நீடிக்கிறார்.
டெஸ்ட் பேட்டிங்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9-வது இடத்தில் நீடிக்கிறார். சுப்மன் கில் (12வது இடம்) மற்றும் ரிஷப் பண்ட் (14வது இடம்) ஆகியோர் தரவரிசையில் சறுக்கியுள்ளனர்.
டி20 பேட்டிங், பந்துவீச்சு: டி20 போட்டிகளில் அபிஷேக் சர்மா (பேட்டிங்) மற்றும் வருண் சக்ரவர்த்தி (பந்துவீச்சு) ஆகியோர் தங்களது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.