மும்பை : பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பினர். பந்து வீச்சில் பும்ரா, தனி ஆளாக அபாரமாக செயல்பட்ட நிலையில், பேட்டிங்கில் இந்திய வீரர்கள் காலை வாரியதால் தொடரை இந்தியா இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதல் முறையாக இந்திய அணி பங்கேற்காத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோர் ரஞ்சிப் போட்டியில் விளையாடாமல் இருப்பதே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களுடைய பேட்டிங் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனால் ஸ்டார் வீரர்கள் அனைவரும் ரஞ்சிப் போட்டிக்கு திரும்ப வேண்டும் என்று பிசிசிஐ சார்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஏற்கனவே மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை ரஞ்சி அணியுடன் பயிற்சியில் பங்கேற்று வருகிறார்.இதன் காரணமாக வரும் 23ஆம் தேதி தொடங்கும் ரஞ்சிப் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போன்று டெல்லி அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்டும் ரஞ்சிப் போட்டியில் விளையாட முடிவெடுத்து இருக்கிறார். சௌராஷ்டிரா அணிக்கு எதிராக ராஜ் கோட்டில் நடைபெறும் ரஞ்சி லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் பங்கேற்பார் என்பது உறுதியாகி இருக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி போட்டியில் விளையாடப் போகிறார்.
இதேபோன்று கில்லும் பஞ்சாப் அணிக்காக ரஞ்சிப் போட்டியில் விளையாட முடிவெடுத்திருக்கிறார். இப்படி ஸ்டார் வீரர்கள் அனைவரும் திரும்பி வரும் நிலையில் விராட் கோலி மட்டும் ரஞ்சி போட்டிக்கு திரும்பாமல் மௌனம் காத்து வருகிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பண்ட் போன்ற வீரர்கள் ரஞ்சிப் போட்டியில் விளையாட ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள்.
ஆனால் விராட் கோலி தான் பங்கேற்பாரா இல்லையா என்பது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி ஒரே மாதிரி ஆட்டம் இழந்து வந்தது ரசிகர்களை கடுப்படையச் செய்தது. முதல் டெஸ்ட் போட்டியின் சதம் அடித்த பின்னர் அடுத்த எட்டு இன்னிங்சில் விராட் கோலி மொத்தமாகவே 90 ரன்கள் தான் சேர்த்தார்.
இதனால் விராட் கோலி ரஞ்சி போட்டியில் திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வரும் நிலையில்,அவர் ஈகோ காரணமாக எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடைசியாக விராட் கோலி 2012 ஆம் ஆண்டு தான் ரஞ்சி அணியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.