மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்த கையோடு லண்டன் கிளம்பிச் சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் திடீரென மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார். கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி ஏற்கனவே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கோலியின் இந்தத் திடீர் வருகை "இரு ஜாம்பவான்களும் சந்திக்கப் போகிறார்களா?" என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
விஜய் ஹசாரே டிராபியில் டெல்லி அணிக்காக அவர் விளையாட இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில், முன்கூட்டியே அவர் இந்தியா திரும்பியது பல யூகங்களைக் கிளப்பியுள்ளது.

கால்பந்து உலகின் 'GOAT' (Greatest of All Time - தலைசிறந்த வீரர்) என்று அழைக்கப்படும் லியோனல் மெஸ்ஸி, 'GOAT India Tour 2025' பயணமாக இந்தியா வந்துள்ளார். கொல்கத்தா பயணத்தை முடித்துக்கொண்டு, ஹைதராபாத் வழியாக அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14) மும்பை வரவுள்ளார்.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மெஸ்ஸி கலந்துகொள்கிறார். இந்தச் சூழலில், கிரிக்கெட் உலகின் 'GOAT' விராட் கோலி மும்பையில் முகாமிட்டிருப்பது, இருவருக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
மும்பை விமான நிலையத்தில் கோலி மற்றும் அனுஷ்கா ஜோடி செம ஸ்டைலாகக் காட்சியளித்தனர். கோலி கருப்பு டி-சர்ட், ஜீன்ஸ், தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து கூலாக வலம் வந்தார். அனுஷ்கா ஆலிவ் பச்சை நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். குழந்தைகளை அழைத்து வராமல் இவர்கள் மட்டும் வந்திருப்பதால், இது ஒரு குறுகிய பயணமாகவோ அல்லது மெஸ்ஸியைச் சந்திப்பதற்கான பயணமாகவோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக கொல்கத்தாவில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சி மோசமான ஏற்பாடுகளால் கலவரத்தில் முடிந்தது. ரசிகர்கள் நாற்காலிகளை உடைத்துத் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். மெஸ்ஸியும் 20 நிமிடங்களில் வெளியேறினார். ஆனால், மும்பை நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள் விளாசி உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் கோலி, அடுத்து டெல்லி அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் விளையாடவுள்ளார். அதற்கு முன்னதாக மெஸ்ஸியுடனான இந்த "கிராஸ்ஓவர்" சந்திப்பு நடந்தால், அது இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தருணமாக அமையும்.