அடிலைட்: ஆஸ்திரலியாவுக்கு எதிரான நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் டோணி ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக மீளாமல் உள்ளதால் அவருக்குப் பதில் விராத் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை கோஹ்லியே இன்று தெரிவித்தார். நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் தான் கேப்டனாக செயல்படவுள்ளதாக தெரிவித்தார் கோஹ்லி.
மேலும் வீரர்கள் பாசிட்டிவான மன நிலையில் போட்டியை எதிர்கொள்ளுமாறு டோணி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி வருவதற்கு முன்பே காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் டோணி ஆட மாட்டார், கோஹ்லிதான் கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஆஸ்திரேலியா வீரர் பில் ஹியூக்ஸ் மரணத்தால் முதல் டெஸ்ட் போட்டி தள்ளிப் போய் நாளை தொடங்குகிறது. இதன் காரணமாக டோணி கேப்டனாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கேற்ப டோணியும் ஆஸ்திரேலியா புறப்பட்டு வந்துள்ளார். ஆனால் அவரது பெருவிரல் காயம் முழுமையாக சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே அவருக்குப் பதில் கோஹ்லி முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்படவுள்ளார். இரு அணிகளுக்கும் இடையே மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தொடர் குறித்து கோஹ்லி கூறுகையில், எங்களிடம் நிறைய திட்டங்கள் உள்ளன. அதை சாதிக்க முயற்சிப்போம். தொடரை வெல்லும் நோக்கில்தான் இங்கு வந்துள்ளோம். ஆனால் களத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதேசமயம், வெற்றியை மட்டுமே மனதில் கொண்டுள்ளோம்.
நமது வீரர்கள் அனைவரும் நல்ல மன நிலையில் உற்சாகமாக உள்ளனர். சவுகரியமாக உணர்கின்றனர். மகிழ்ச்சியாக உள்ளனர். அனைவரும் வெற்றிக்காக பாடுபட காத்திருக்கிறார்கள். அருமையான தொடராக இது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
டோணி இன்னும் முழுமையான உடல் தகுதி பெறவில்லை. அடுத்த சில நாட்களில் அவர் முழுமையாக தயாராகி விடுவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் விரைவில் 100 சதவீத தகுதியைப் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
கடந்த இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயத்திலிருந்து வீரர்கள் மீண்டு விட்டனர். அதைப் பற்றி நினைக்கக் கூட யாரும் விரும்பவில்லை. ஆஸ்திரேலியா போட்டி குறித்து மட்டுமே தற்போது சிந்திக்கிறோம்.
அதை விட்டு விட்டு அடுத்த 2 மாதங்கள் குறித்து மட்டுமே நாம் சிந்திக்க வேண்டும். வரப் போகும் டெஸ்ட் போட்டிகளை வெல்வது குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் வருங்காலம் சிரமமாகி விடும் என்றார் கோஹ்லி.