டெல்லி: கழுத்தில் ஏற்பட்ட காயம் மற்றும் வலியால், இங்கிலாந்து கவுன்டி அணியான சுர்ரேவுக்கு விராட் கோஹ்லி விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மூன்று டி-20 போட்டிகள், 3 ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
கடந்த முறை இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது சரியாக விளையாடாததால், இந்த முறை முன்னதாக அங்கு பயிற்சி மேற்கொள்ள இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி முடிவு செய்தார்.
இதற்காக, இங்கிலாந்து கவுன்டி அணியான சுர்ரேவுக்காக, ஜூன் மாதம் விளையாட இருந்தார். அதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டியின்போது, கழுத்தில் ஏற்பட்ட காயம் மற்றும் வலியால், கோஹ்லி பாதிக்கப்பட்டுள்ளார். ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், கவுன்டி போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 15ம் தேதி உடல் தகுதி சோதனையிலும் அவர் ஈடுபட உள்ளார்.