மும்பை : இந்திய அணியை எப்போதுமே எதிரியாக பார்க்கும் ஆஸ்திரேலியா அணி ஒரு சம்பவத்துக்கு பிறகு தங்களை மதிக்க தொடங்கி விட்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரும் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
இறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள விராட் கோலி பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி இருக்கிறார். இதில் ஓவல் மைதானம் எப்போதுமே சவால் நிறைந்ததாக இருக்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நிச்சயமாக எங்களுக்கு பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளும் கிடைக்காது. இதன் காரணமாக பேட்ஸ்மேன் கொஞ்சம் எச்சரிக்கையாக விளையாட வேண்டும். களத்தில் எப்போதுமே கவனமாக இருந்து சூழலுக்கு தகுந்த மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டும். கவனமும் ஒழுக்கமும்தான் வெற்றியை பெற்று தரும்.
இறுதிச்சுற்று ஒரே ஒரு ஆட்டம் தான். ஆடுகளத்திற்கு தகுந்தார் மாதிரி எந்த அணி சிறப்பாக தங்களை மாற்றிக்கொண்டு விளையாடுகிறார்களோ, அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். இதுதான் இந்த தொடரின் அழகே. தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி எங்களை ஒரு எதிரியாக தான் பார்த்து வந்தார்கள். ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் நாங்கள் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் தொடரை வென்ற பிறகு எங்கள் மீது அவர்களுக்கு மரியாதை ஏற்பட்டிருக்கிறது.
தற்போது எல்லாம் ஆஸ்திரேலியாவை நாங்கள் எதிர்கொள்ளும் போது அவர்கள் எங்கள் மீது வைத்திருக்கிற மரியாதை தெரிகிறது.நம்மை இரண்டு முறை அவர்கள் தோற்கடித்திருக்கிறார்கள் என்பதால் இந்திய வீரர்களை நன்கு மதிக்க தொடங்கி இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணி என்பது கடும் சவால்களை கொடுக்கும். நீங்கள் சிறிய வாய்ப்பை கொடுத்தால் கூட அவர்கள் அதனை பயன்படுத்திக் கொண்டு உங்களை வீழ்த்தி விடுவார்கள்.

போட்டியில் உங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். நிச்சயமாக என்னுடைய ஆட்டத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு விளையாட முடியும். ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்றால் நான் என்னுடைய ஆட்டத்தை அதிகப்படுத்த வேண்டும்.
இதற்கு திறமையும் மிகவும் முக்கியம். நான் என்னுடைய ஆட்டத்தில் சிறப்பாக இருந்தால் மட்டுமே ஆஸ்திரேலிய போன்ற அணியை வீழ்த்த முடியும். இங்கிலாந்து ஆடுகளத்தில் எப்போதுமே பந்து நன்றாக ஸ்விங்கும் சீமும் ஆகும். எந்த பந்தை நீங்கள் அடிக்கப் போகிறீர்கள் எந்த பந்தை விடப் போகிறீர்கள் எந்த பந்தை தடுக்க போகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்று கோலி கூறினார்.