
கோலி நல்ல கேப்டனா?
விராட் கோலி நல்ல பேட்ஸ்மேன். அவர் இல்லாத இந்திய அணி நிச்சயம் 100 சதவீதமாக இருக்காது. அதே சமயம், கோலி என்ற கேப்டனின் முடிவுகள் அணியில் சில சமயம் பலவீனமாக அமைந்து விடுகிறது. இங்கே நாம் கோலியின் தவறான டிஆர்எஸ் ரிவ்யூக்கள் பற்றி மட்டும் பேசினால் போதாது. கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இணைந்து தேர்வுக் குழுவை டம்மியாக்கி விட்டு தங்களுக்கு விருப்பமான வீரர்களை தேர்வு செய்வதை பற்றியும் பேச வேண்டும்.

கோலியின் மனநிலை
கோலி தன் மனநிலை இந்திய அணியில் பிரதிபலிக்க வேண்டும் என நினைக்கிறார். இது ஓரளவு பயன்படலாம். ஆனால், பல சமயம் இது எல்லைமீறி ஒரு தனி நபரின் சுதந்திரத்தையும் பறிப்பதாக இருக்கிறது. உதாரணத்திற்கு கோலி அதிரடி பேட்ஸ்மேன்கள், டி20 யுகத்திற்கு ஏற்ப கிரிக்கெட் ஆடுபவர்கள், ஸ்டைலான பேட்டிங் செய்பவர்கள் ஆகியோரை அதிகம் விரும்புவதாக தெரிகிறது.

அதிரடி பேட்ஸ்மேன்கள் ஆர்வம்
ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பண்டியா ஆகியோர் அதிரடியாக ஆடக் கூடியவர்கள். இவர்களில் ராகுல் மற்றும் பண்டியா தொடர்ந்து நிலையாக ரன் குவிப்பவர்கள் இல்லை. பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலம் ரன் குவிப்பதை இவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதிக டெக்னிக் கொண்ட பேட்டிங் முறையை இவர்கள் பின்பற்றுவதில்லை. இதனால், இவர்களால் அனைத்து போட்டிகளிலும் குறிப்பிட்ட அளவு ரன்களை அடிக்க முடிவதில்லை. ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளை அடுத்து ஒருநாள் போட்டிகளில் களம் இறங்க உள்ளார். கிட்டதட்ட ரிஷப் பண்ட் தோனியை வெளியே அனுப்பும் முயற்சியாகவே அணிக்கு உள்ளே இழுக்கப்படுகிறார் என சிலர் கூறி வருகின்றனர். ரிஷப் பண்ட்டும் அதிரடி வகை பேட்ஸ்மேன்தான். விக்கெட் கீப்பிங்கில் டெக்னிக் இல்லாதவர் என்பதும் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.

அணியில் இடம் கிடைக்குமா?
கோலி இப்படி டெக்னிக் இல்லாத பேட்ஸ்மேன்களுக்கு அதிக வாய்ப்பு அளிப்பதும், டெக்னிகல் வீரர்களுக்கு ஒன்று, இரண்டு போட்டிகளில் சரியாக ரன் குவிக்காவிட்டால் அவர்களை அணியில் இருந்து நீக்குவதுமாக இருக்கிறார். பல வீரர்களுக்கு அடுத்த போட்டியில் தங்களுக்கு அணியில் இடம் இருக்குமா? என்ற சந்தேகத்தை கொடுத்து வருகிறார் கோலி. ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் மாற்றம், ஒவ்வொரு தொடரிலும் 4-5 வீரர்கள் சோதனை என்ற பெயரில் மாற்றப்படுவது என கோலி - சாஸ்திரியின் தலைமை முறை கடும் வெறுப்பை வீரர்களிடையே விதைத்துள்ளது.

வெடித்து வரும் வெறுப்புணர்வு
டெஸ்ட் போட்டிகளில் இந்த வெறுப்புணர்வு வீரர்கள் இடையே வெடித்து விட்டது. கருண் நாயர், முரளி விஜய் ஆகியோர் தாங்கள் நீக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்துவிட்டனர். ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டன் பதவியில் இருக்கும் ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஏன் இடம் இல்லை என்பது புரியாத மர்மமாக உள்ளது. இதன் பின்னணியில் அரசியல் உள்ளது எனவும் கூறப்படுகிறது. அடுத்து ஒருநாள் போட்டிகளிலும் இந்த வெறுப்பு வெடிக்க அதிக காலம் ஆகாது. ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் யார் எனக் கேட்டால் குறைந்தது இருபது பெயர்களாவது நாம் குறிப்பிடும் வகையில் தான் நிலைமை இருக்கிறது. தன் அணியின் வீரர்களுக்கு மதிப்பளித்து, தட்டிக் கொடுத்து வேலை வாங்காமல், ஒரு போட்டியின் செயல்பாடுகளை வைத்து செயல்படும் கோலியின் பலவீனம் தான் இதற்கு காரணம்.

மாற்று திட்டம் இல்லை
ஆசிய கோப்பை, நிதாஸ் தொடர் போன்றவற்றில் தற்காலிகமாக கேப்டன் பதவியை பெற்ற ரோஹித் சர்மா தோனியின் அமைதியான அணுகுமுறையை பின்பற்றுகிறார். வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார். அணியில் சமபலத்தை கொண்டு வருவதில் கோலியை விட சிறப்பாகவே செயல்பட்டார். கோலி எப்போதும் ஒரு திட்டம் போட்டுவிட்டு, நேர்கோட்டில் பயணிப்பதை போல தான் போட்டிகளின் போது செயல்படுகிறார். கோலியிடம் மாற்று திட்டம் என்பது மிக மிக அரிது. ஓவர் மாற்றும் போது பந்துவீச்சாளர் தேர்வு, பீல்டிங் தேர்வு, டிஆர்எஸ் ரிவ்யூ என அனைத்திலும் கோலியை காட்டிலும் ரோஹித் சிறப்பாகவே செயல்படுகிறார். இந்திய ஒருநாள் அணி கோலியின் தலைமையில் உலகக்கோப்பை வெல்லும் என ரசிகர்களே ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் ரோஹித் சர்மாவை இப்போதே கேப்டன் பதவியில் அமர வைக்கலாம். ஆனால், தற்போது இந்திய கிரிக்கெட்டில் எப்போதும் இல்லாத அளவு அரசியல் உச்சத்தில் உள்ளது. நமக்கு நாமே ரோஹித் சர்மா வந்தால் நன்றாக இருக்கும் என கூறிக் கொள்ளலாம். அது நடக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications