சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 16 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி இலங்கையில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் விராட் கோலி களமிறங்கினார்.
தொடக்க வீரராக அந்த போட்டியில் விளையாடிய விராட் கோலி 22 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார்கள். இதில் ஒரு பவுண்டரி அடங்கும். அதன் பிறகு விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர், சச்சின் பிறகு அதிக ரன்கள் அடித்த வீரர் போன்ற பல சாதனைகளை விராட் கோலி படைத்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மா விராட் கோலியை வெகுவாக பாராட்டுகிறார். விராட் கோலி உத்வேகம் உள்ள வீரர். அவருக்கு வெற்றி எப்போதும் வேண்டும். அவருடைய வெற்றி வேட்கை யாராலும் ஈடு கொடுக்க முடியாதது. நீங்கள் எப்போது விராட் கோலியை பார்த்தாலும் அவர் களத்தில் ஒரு விதமான சக்தியை கொண்டு வருவார்.
இந்திய அணிக்காக அவர் பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். அவருடைய அனுபவம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். வெற்றி என்பதை கடையில் சென்று உங்களால் வாங்க முடியாது. அது போராட்டத்தின் மூலம் கிடைக்கக்கூடியது. இதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இதை அனைத்துமே விராட் கோலி செய்திருக்கிறார்.
எனவே விராட் கோலிக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்போதெல்லாம் கோலியை பார்க்கிறேனோ அப்போதெல்லாம் அவருடைய கிரிக்கெட் வேறு ஒரு லெவலில் இருக்கின்றது என்று ரோகித் சர்மா பாராட்டுகிறார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட் கோலி இந்திய அணி மிகவும் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.