மும்பை: தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்திற்கு முன் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.
ஒவ்வொரு தொடருக்கும் முன் கேப்டன்கள் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம் தான் .
ஆனால் இம்முறை விராட் கோலி அளித்த இந்தப் பேட்டி பல கேள்விகளுக்கு விடையளித்தது, சர்ச்சைக்கும் முற்றுப் புள்ளி வைத்தது.

விராட் கோலி டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதாக அறிவித்த போது, அப்படி செய்ய வேண்டாம் என்று விராட் கோலிக்கு கூறியதாக கங்குலி தெரிவித்தார். டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினால் , ஒருநாள் போட்டிக்கும் கேப்டன் பதவியை மாற்ற வேண்டியிருக்கும். இதனால் அப்படி செய்ய வேண்டாம் என்று விராட் கோலியிடம் கோரிக்கை வைத்ததாக கங்குலி கூறினார்.
ஆனால், விராட் கோலி இன்று அளித்த பேட்டியில், டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக பி.சி.சி.ஐ.யிடம் கூறிய போது, அதனை அனைவரும் ஏற்று கொண்டதாகவும், யாரும் கேப்டன் பதவியை விட்டு செல்ல வேண்டாம் என்று தம்மிடம் சொல்லவில்லை என்றும் கூறினார்.
கேப்டன் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவேன் என்று கூறிய விராட் கோலி, தம்மை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது குறித்து வருத்தம் இல்லை என்று கூறினார். விராட்கோலியின் பேட்டி மூலம் கங்குலி சொன்னது பொய்யாகிவிட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கங்குலி ஏன் அப்படி சொன்னார் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது கங்குலியை ரசிகர்களிடம் விராட் கோலி சிக்க வைத்துவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த கங்குலி, விராட் கோலிக்கு மேலும் பிரச்சினைகளை தரலாம் அல்லது டெஸ்ட் கேப்டன் பதவிக்கும் ஆப்பு வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.