சென்னை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 121 ரன்களையும், விராட் கோலி 74 ரன்களையும் விளாசி அசத்தினர். இந்தப் போட்டிக்கு முன்பாக நடந்த 2 போட்டிகளில் விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இதனால் கடைசி போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதன்பின் சிட்னி மைதானத்தில் விராட் கோலி கடைசியாக விளையாட களமிறங்கிய போது ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று மரியாதை கொடுத்தது. இதன்பின் விராட் கோலி முதல் ரன்னை எடுத்த போது சிட்னி மைதானத்தில் எழுந்த கரகோஷம் உச்சத்தை தொட்டது.

அதனை அறிந்த விராட் கோலி, சிரித்துக் கொண்டே ரசிகர்களுக்கு தம்ஸ் அப் காட்டினார். விராட் கோலியின் இந்த செயல்பாடுகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதுதொடர்பாக இந்திய ஜாம்பவான் கிரிஸ் ஸ்ரீகாந்த் பேசுகையில், முதல் ரன்னை எடுத்த போது எழுந்த கோஷத்தை விராட் கோலி ஜாலியாக எடுத்துக் கொண்டார். அதுதான் ஒரு விளையாட்டு வீரனுக்கு அழகு.
அப்படியான செயல் மூலமாக விராட் கோலி மாபெரும் மனிதராக தெரிகிறார். அந்த ஒரு ரன்னை எடுத்த பின் விராட் கோலி சதம் விளாசியதை போல் சிரித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து 2 போட்டிகளில் டக் அவுட்டான போதும், அவரிடம் அந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அதேபோல் நேற்றைய இன்னிங்ஸில் எவ்வளவு எளிதாக ஸ்ட்ரைக்கை மாற்றிக் கொண்டே இருந்தார்.
ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ஸ்ட்ரைக் மாறிக் கொண்டே இருந்ததால், பவுலர்களால் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை. 2011 உலகக்கோப்பையின் போது இளம் வீரராக இருந்த விராட் கோலி, அவரின் இடத்தை நிரந்தம் செய்ய போராடிக் கொண்டிருந்தார். அங்கிருந்து இவ்வளவு பெரிய உயரத்திற்கு விராட் கோலி வந்திருப்பதன் மூலமாக, அவரின் நம்பிக்கையை அறிந்து கொள்ள முடியும்.
இன்னும் முழு ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். ஃபீல்டிங், ரன்னிங் என்று உற்சாகமாக இருக்கிறார். ஃபீல்டிங்கில் இப்போதும் தன்னுடைய இருப்பை காட்டிக் கொண்டே இருக்கிறார். அவர் களத்தில் இருந்தால் ஒரு எனர்ஜி இருந்து கொண்டே உள்ளது. சேஸிங் என்று வந்துவிட்டால், விராட் கோலியை போல் ஒரு வீரரை பார்க்க முடியாது. சிட்னியில் விராட் கோலி களமிறங்கிய போது ஒவ்வொரு ரசிகனும் எழுந்து நின்றார்கள். அதுதான் உலக கிரிக்கெட்டுக்கு விராட் கோலி கொடுக்கும் மரியாதை என்று தெரிவித்துள்ளார்.