டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஆர் சி பி அணி 181 ரன்கள் குவித்து அதனை டெல்லி அணி 16.4 ஓவரில் வெற்றிகரமாக துரத்தியது. இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய கேப்டன் டுபிளசிஸ், 12வது ஓவருக்கு பிறகு ஏதேனும் ஒரு ஓவரில் அடித்து ஆடி இருந்தால் 200 ரன்களை தொட்டு இருப்போம் என்று கூறியிருந்தார்.
அந்த ஓவர்களில் விராட் கோலி தான் பேட்டிங்கில் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தன்னுடைய பேட்டிங் குறித்து பேசிய விராட் கோலி பல்வேறு கருத்துகளை கூறினார். அதனை தற்போது பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரில் 7000 ரன்கள் என்பது என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் ஒரு மைல் கல்லாக தான் பார்க்கிறேன். என் அணிக்காக நான் ரன் சேர்க்கிறேன். டெல்லியில் தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. இது எனக்கு ஒரு சிறந்த தருணம் ஆகும். என்னுடைய குடும்பம், மனைவி, என்னுடைய பயிற்சியாளர் என அனைவரும் இங்கு இருக்கிறார்கள்.
அவர்கள் முன் இன்று கிரிக்கெட் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் நான் சிறுவயதில் விளையாடிய கிரிக்கெட் மைதானத்தில் என்னுடைய பெயர் பொருந்திய பார்வையாளர்கள் மாடத்தைப் பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் எனக்கு நடக்கும் என்று நான் சிறுவயதில் நினைத்துக் கூட பார்த்ததில்லை.
இதற்கு நான் எப்போதும் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். தொடர்ந்து நான் கடினமாக உழைக்க விரும்புகிறேன். என்னுடைய மனைவி , குழந்தை இருக்கும்போது என்னுடைய வாழ்க்கையில் அமைதி நிலவுகிறது. கிரிக்கெட் என் வாழ்க்கையில் ஒரு அங்கம் தான். என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்றைய ஆட்டத்தை பார்ப்பதை நான் ஸ்பெஷலாக உணர்கிறேன்.

இன்று லோம்ரர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் கீழ் வரிசை வீரர்கள் நன்றாக விளையாடி எங்களுக்கு நம்பிக்கை அளித்தால், நானும் டுபிளசிசும் விளையாடும்போது கொஞ்சம் அதிரடியாக விளையாட முயற்சி செய்வோம். ஆட்டத்தின் நடு ஓவர்களில் ரன் குவிக்கும் வேகத்தில் தோல்வி ஏற்படுகிறது.
இதற்கு காரணம் கடைசிவரை நின்று விளையாட வேண்டும் என்பதால் அப்போது கொஞ்சம் அமைதி காக்க வேண்டி இருக்கிறது. எனினும் கீழ் வரிசை வீரர்கள் அதிரடியாக விளையாடுகிறார்கள் என்றால் நாங்களும் சில ஷார்ட்டுகளை ஆடி ரன் குவிக்கும் வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்வோம் என்று விராட் கோலி கூறினார்.