28 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
கடந்த 2011ல் உலக கோப்பை தொடரை 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 2வது முறையாக வெற்றி கொண்டது. தோனி தலைமையிலான இந்திய அணி, அதிகமான இளம் வீரர்களை கொண்ட அணி, இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியது. தன்னுடைய கேரியரில் ஒருநாள் உலக கோப்பை வெற்றியை சுவைக்க வேண்டும் என்ற சச்சின் டெண்டுல்கரின் கனவு இதன்மூலம் நனவானது.
சச்சினுக்கு முதல் மரியாதை
இந்திய அணி இரண்டாவது முறையாக பெற்ற இந்த உலக கோப்பை வெற்றியில் சச்சின் டெண்டுல்கருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது. இளம் வீரர்கள் விராட் கோலி உள்ளிட்டவர்கள் சச்சின் டெண்டுல்கரை தங்களது தோள்களில் சுமந்து கொண்டு மைதானத்தில் வலம் வந்தனர். இதனிடையே, சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக வழங்கியது அதிகம் என்பதாலேயே முதல் மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சச்சினின் இறுதி வாய்ப்பு
மயங்க் அகர்வாலுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற விராட் கோலி 2011 உலக கோப்பை வெற்றி கொண்டாட்டம் குறித்து பகிர்ந்து கொண்டார். இந்த வெற்றியை அடுத்து தான் உண்மையான மகிழ்ச்சியை அடைந்ததாகவும் அனைவரது கவனமும் சச்சின் டெண்டுல்கரை சூழ்ந்ததாகவும் குறிப்பிட்டார். ஏனெனில், அவருக்கு உலக கோப்பை வெற்றியை பெறுவதற்கு அது இறுதி வாய்ப்பாக இருந்ததாகவும் விராட் தெரிவித்துள்ளார்.
முதல் மரியாதைக்கு காரணம்
இந்தியாவின் பல்வேறு வெற்றித் தருணங்களின் சாட்சியாக இருந்துவந்த சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய ஆட்டத்தின்மூலம் இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார் விராட் கோலி. இத்தகைய காரணங்களால் மட்டுமே சச்சின் டெண்டுல்கருக்கு உலக கோப்பை வெற்றியின் முதல் மரியாதை கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.