மும்பை : இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் தனிப்பட்ட விருப்பம் குறித்தும், குடும்பம் குறித்தும் அதிகப் பிரசங்கித்தனமாக பேசி ரசிகர்களிடம் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்கள் இரண்டு முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்கள்.
முதலில் விராட் கோலி குறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசிய சம்பவத்தை பார்ப்போம். தென்னாப்பிரிக்க பேட்டிங் ஜாம்பவானான ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் நீண்ட காலம் ஒன்றாக ஆடியவர்கள் என்பதால் அவர்களுக்குள் கிரிக்கெட்டை தாண்டிய நல்ல நட்பு உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி தாமாக விலகினார். அவர் ஏன் விலகினார் என்பது குறித்து யாரும் ஊகங்களை வெளியிட வேண்டாம் என விராட் கோலி சார்பில் பிசிசிஐ கேட்டுக் கொண்டது. இந்த நிலையில் கோலியிடம் நேரடியாக பேசிய டிவில்லியர்ஸ் அது குறித்து ஒரு வீடியோவில் பேசுகையில், விராட் கோலி - அனுஷ்கா சர்மா இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பதால், தன் மனைவியுடன் நேரம் செலவிட வேண்டும் என முடிவு செய்து விராட் கோலி டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. இந்த முடிவை நாம் மதிக்க வேண்டும் என டிவில்லியர்ஸ் கூறி இருந்தார்
இதுவரை விராட் கோலியோ, அனுஷ்கா சர்மாவோ இந்த தகவலை பொதுவெளியில் வெளிப்படையாக கூறாத நிலையில், என்ன தான் நண்பர் என்றாலும் மூன்றாவது நபரான ஏபி டிவில்லியர்ஸ் இந்த தகவலை உலகுக்கு அறிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதை அடுத்து ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர்.
அடுத்து ரோஹித் சர்மா குறித்து மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளரான முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் பேசியதும் சர்ச்சையாக மாறியது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு, ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வரும் நிலையில், அதற்கு விளக்கம் அளித்தார் மார்க் பவுச்சர்.
அப்போது ரோஹித் சர்மா தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வகையில் கேப்டன் பதவியில் இருந்து விலக ஒப்புக் கொண்டதாக அவர் கூறி இருந்தார். இதில் உண்மை இல்லை என பொருள் படும்படி ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே இந்தப் பேட்டியில் பல விஷயங்கள் தவறாக இருக்கிறது என கூறி இருந்தார். மார்க் பவுச்சர் மும்பை இந்தியன்ஸ் விவகாரத்தை பற்றி பேசியதோடு நிற்காமல் ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை எல்லாம் பேசியது ரோஹித் சர்மாவின் ரசிகர்களை கோபம் கொள்ள வைத்தது.