மும்பை: இந்திய கிரிக்கெட்டின் தூண்களாக விளங்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் சமீபத்தில் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் முறையான வழியனுப்புதல் போட்டி இல்லாமல் ஓய்வு பெற்றது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
மூத்த வீரர்களுடனான தகவல் பரிமாற்றத்தில் பிசிசிஐ தோல்வியடைந்துவிட்டதாகவும், ஜாம்பவான்களுக்கு உரிய மரியாதையை அளிக்கத் தவறிவிட்டதாகவும் முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஸ்ரீகாந்த் இது குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

கடந்த மே மாதம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகி வந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, யாரும் எதிர்பாராத விதமாக டெஸ்ட் போட்டி ஓய்வை அறிவித்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
முதலில் ரோஹித் சர்மாவும், ஐந்து நாட்கள் கழித்து விராட் கோலியும் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். எந்தவித முன்னறிவிப்போ, வழியனுப்புதல் போட்டியோ இல்லாமல், இந்தியாவின் இருபெரும் நவீன கால ஜாம்பவான்கள் திடீரென வெளியேறியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள், தற்போது சேதேஷ்வர் புஜாராவும் ஓய்வை அறிவித்துள்ளது, பிசிசிஐயின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழுத் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தனது யூடியூப் சேனலில் பிசிசிஐயை கடுமையாகச் சாடியுள்ளார். "விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற விஷயத்தில் ஒரு பெரிய தகவல் தொடர்பு இடைவெளி இருந்ததை நான் உறுதியாக நம்புகிறேன். 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடிய ஒரு சிறந்த வீரருக்கு சிறப்பான வழியனுப்புதல் கிடைத்திருக்க வேண்டும். பிசிசிஐ அவர்களிடம் பேசியிருக்க வேண்டும். ஆனால், அப்போது நடந்த சம்பவங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல" என்று அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், "விராட் கோலியின் ஓய்வு திடீரென நடந்துவிட்டது. அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் திறமை இருந்தது. அவருக்கு மிகச் சிறந்த வழியனுப்புதல் கிடைத்திருக்க வேண்டும். விராட் கோலியைப் போன்ற ஒரு வீரரை இந்திய அணி மீண்டும் பெறுவது கடினம்" என்றும் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டார்.
இதேபோல, நீண்ட காலமாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த புஜாராவிடமும், அவரது ஓய்வுத் திட்டங்கள் குறித்து பிசிசிஐ முன்கூட்டியே பேசி, அவருக்கு ஒரு சிறப்பான வழியனுப்புதல் போட்டியை ஏற்பாடு செய்திருக்கலாம் என்றும் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். வீரர், தேர்வாளர்கள் மற்றும் பிசிசிஐ இடையே சரியான ஒத்துழைப்பு இல்லாததே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
123 டெஸ்ட் போட்டிகளில் 9,230 ரன்கள் குவித்த கோலியும், 67 டெஸ்ட் போட்டிகளில் 4,301 ரன்கள் எடுத்த ரோஹித்தும், "இந்தியாவின் நவீன சுவர்" என்று அழைக்கப்பட்ட புஜாராவும் ஒரு வழியனுப்புதல் போட்டிக்குக் கூட தகுதியில்லாதவர்களா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.