மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் படையை வைத்து தொடரை சமன் செய்ததன் மூலம், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி இருக்கிறார் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர். இந்த வெற்றி தந்த உற்சாகத்தில், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் அதிரடி மாற்றங்களைச் செய்ய அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.அவர்கள் இருவரும் டி20 அணி மற்றும் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். 2027 ஒருநாள் கோப்பை உலகக்கோப்பையை மனதில் வைத்து ஒருநாள் அணியில் மட்டும் விளையாட முடிவு செய்து உள்ளனர். ஆனால், அதற்கும் முடிவுரை எழுத இருக்கிறார் கம்பீர்.

2025 இங்கிலாந்து சுற்றுப்பயணம், கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் அணுகுமுறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. முகமது சிராஜ் கிட்டத்தட்ட 180 ஓவர்கள் வீசி தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தினார். வாஷிங்டன் சுந்தர் அழுத்தமான தருணங்களில் நிதானம் காட்டினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, சாய் சுதர்சன் என இளம் பட்டாளம் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. இந்த வெற்றி, "பெரிய பெயர்களை நம்பி நான் இல்லை, திறமைக்கு மட்டுமே இடம்" என்ற கம்பீரின் செய்தியை உரக்கச் சொல்லியுள்ளது.
இந்த வெற்றிக்குப் பிறகு, ஒருநாள் அணி அணியிலும் இதே போன்ற ஒரு இளம் வீரர்கள் படையை கட்டமைக்க கம்பீர் விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வுபெற்று, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
தற்போது 38 வயதாகும் ரோஹித் சர்மாவும், 36 வயதாகும் விராட் கோலியும் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. அடுத்து வரவிருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் அவர்கள் இந்திய அணிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், 2027 உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உள்ள நிலையில், அவ்வப்போது சில ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவது, உலகக் கோப்பை போன்ற பெரிய தொடருக்கு அவர்களைத் தயாராக வைத்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினர், கோலி மற்றும் ரோஹித் சர்மாவை 2027 உலகக் கோப்பை வரை தொடர அனுமதிப்பதா அல்லது இளம் வீரர்களுக்கு வழிவிடுவதா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க உள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "ஆம், இதுகுறித்து விரைவில் விவாதிக்கப்படும். அடுத்த உலகக் கோப்பைக்கு (நவம்பர் 2027) இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவகாசம் உள்ளது. அப்போது கோலி மற்றும் ரோஹித் இருவருக்கும் 40 வயதை நெருங்கிவிடும். எனவே, அந்த பெரிய தொடருக்கு முன்னதாக ஒரு தெளிவான திட்டம் தேவை. நாங்கள் சில இளம் வீரர்களையும் சோதித்துப் பார்க்க வேண்டும்," என்று ஒரு பிசிசிஐ அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறி உள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், "கோலியும், ரோஹித்தும் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு (ஒருநாள் மற்றும் டி20) மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்கள் கிட்டத்தட்ட அனைத்தையும் சாதித்துவிட்டனர். எனவே, யாரும் அவர்களை ஓய்வுபெற கட்டாயப்படுத்தப் போவதில்லை. ஆனால், அடுத்த ஒருநாள் போட்டி சுழற்சி தொடங்குவதற்கு முன்பு, அவர்களது மனநிலை மற்றும் உடல்நிலை குறித்து நேர்மையான மற்றும் தொழில்முறை ரீதியான உரையாடல்கள் நிச்சயமாக இருக்கும். அதைப் பொறுத்தே எல்லாம் அமையும்," என்று கூறியுள்ளார்.
சுருக்கமாகச் சொன்னால், கம்பீர் யாரையும் கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைக்க விரும்பவில்லை.ஆனால், இந்திய அணியின் எதிர்கால நலன் கருதி, வீரர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை வெளிப்படையாகப் பேசி, ஒரு கூட்டு முடிவை எடுக்கவே அவர் விரும்புகிறார். அந்த "நேர்மையான உரையாடல்கள்" இந்திய ஒருநாள் அணியில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை வெளியேற்றுமா?