84 வருட இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில், முதல் முறையாக கோஹ்லி செய்த சாதனை!
ஆன்டிகுவா: வெளிநாட்டு மண்ணில் 200 ரன்கள் விளாசிய முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்றுவரும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஆன்டிகுவாவிலுள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கேப்டன் விராட் கோஹ்லி சதம் விளாசிய நிலையில், 2வது நாள் ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தினார்.

டபுள் செஞ்சுரி
நேற்றைய போட்டியில் 200 ரன்களை தொட்ட நிலையில் கோஹ்லி அவுட் ஆனார். இதற்கு அவர் சந்தித்த பந்துகள் 281 மட்டுமே.

மண்ணுக்கு முத்தம்
இரட்டை சதம் விளாசியதும் ஹெல்மெட்டை கழற்றிய கோஹ்லி, ரசிகர்கள் கைதட்டல் பாராட்டை ஏற்றுக் கொண்டார். பின்னர் எதிர் முனையில் நின்ற அஸ்வினை கட்டிப்பிடித்துவிட்டு, சச்சினை போலவே, வானத்தை நோக்கி கடவுளுக்கு நன்றி சொன்னார். பிறகு, மண்டியிட்டு தரையில் முத்தமிட்டார்.

முதல் கேப்டன்
விராட் கோஹ்லிதான் வெளிநாட்டு மண்ணில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் என்பது இதில் கூடுதல் சிறப்பாகும். மேலும், இது அவரின் முதலாவது டெஸ்ட் இரட்டை சதமாகும்.

84 வருட வரலாறு
84 வருட கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கேப்டனும் வெளிநாட்டில் இரட்டை சதம் விளாசியது இல்லை என்பது இதில் ஆச்சரியம்தான்.

புஜாராவுக்கு பிறகு
2013ம் ஆண்டு மார்ச் மாதம், ஹைதராபாத்தில் ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புஜாரா இரட்டை சதம் விளாசினார். அதன்பிறகு, 3 வருடங்கள், 4 மாதங்களுக்கு பிறகு ஒரு இந்திய வீரர் இரட்டை சதம் விளாசியதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications