மும்பை: ஐபிஎல் தொடரில் அஸ்வின், முரளி விஜய், ராகுல் உள்பட பல முன்னணி இந்திய வீரர்கள் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வரும் 5ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பெங்களூர் அணி கேப்டன் விராட் கோஹ்லி தோள்பட்டை காயத்தால் முதல் சில போட்டிகளில் ஆட முடியாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோஹ்லியின் உடல்நிலை குறித்து ஏப்ரல் 2வது வாரத்தில்தான் பரிசீலித்து சொல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது. எனவே முதல் இரு வாரங்களுக்கு கோஹ்லி ஆடப்போவதில்லை, அதன்பிறகும் நிலைமை எப்படிஇருக்கும் என்பது இப்போது தெரியவும் இல்லை.
இதேபோல லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தோள்பட்டை காயத்தால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அவர்களாலும் ஐபிஎல் தொடரில் ஆட முடியாது. புனே அணியின் அஸ்வின் தொடர்ச்சியாக 13 உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 700க்கும் மேற்பட்ட ஓவர்களை வீசியதால் கடுமையான உடல்நல பிரச்சினையில் சிக்கியுள்ளார். அவருக்கு தற்போது நீண்ட ஓய்வு தேவைப்படுவதால் அவரும் ஆட முடியாது.
ரவீந்திர ஜடேஜாவின் கை விரல்களில் காயமேற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பல டெஸ்டுகளில் 700க்கும் மேற்பட்ட ஓவர்கள் வீசியதால் அவர் ஸ்பின் செய்யும் விரலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல 12 டெஸ்ட் போட்டிகளில் 350க்கும் மேற்பட்ட ஓவர்கள் வீசிய உமேஷ் யாதவுக்கு இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது. எனவே இவ்விருவருக்கும் 2 வாரங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சக வீரர் ஹர்திக் பாண்ட்யா முழு உடல் தகுதியோடு உள்ளதால் அவர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்கள்.