சென்னை: டெத் ஓவர்களில் தோனியை விடவும் ரோகித் சர்மா தான் எதிரணிக்கு பயத்தை அளிக்கக் கூடிய பேட்ஸ்மேன் என்று விராட் கோலி தன்னிடம் கூறியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். விராட் கோலிக்கு பின் 241 இன்னிங்ஸ்களில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை குவித்து சச்சினின் சாதனையையும் முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடக்கும் கடைசி வீரராக ரோகித் சர்மா தான் இருப்பார் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ரோகித் சர்மாவின் பேட்டிங் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் பேசி இருக்கிறார். அதில், 6 ஆண்டுகளுக்கு முன்பாக நானும் விராட் கோலியும் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்தார். உச்சக்கட்ட ஃபார்மில் பவுலர்களை விளாசிக் கொண்டிருந்தார். அப்போது நான் ஒரு பவுலராக ரோகித் சர்மா எங்கே வீசலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன்.
அப்போது விராட் கோலி திடீரென, டெத் ஓவர்களில் கேப்டன்களுக்கு பயத்தை அளிக்கக் கூடிய பேட்ஸ்மேன் யார் தெரியுமா என்று கேட்டார். அதற்கு நான், தோனியா என்று கேட்டேன். அதற்கு இல்லை, ரோகித் சர்மா என்று விராட் கோலி கூறினார். ஏன் என்று விராட் கோலியிடம் கேட்ட போது, ரோகித் சர்மாவுக்கு டெத் ஓவர்களில் எந்த திசைகளிலும் போட முடியாது. அனைத்து வகையான ஷாட்களையும் ரோகித் சர்மா வைத்திருக்கிறார்.
வேட்டைக்காரன் படத்தில் சொல்வது போல், ரோகித் சர்மா என்றால் பயம் என்று மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு ரோகித் சர்மாவின் ஆட்டம் நெருப்பு மாதிரி இருக்கும். வரும் உலகக்கோப்பையில் ரோகித் சர்மா இன்னொரு இரட்டை சதம் விளாசுவார் என்று தான் எனக்கு தோன்றுகிறது. பதிரானா பந்துவீச்சில் அனைத்து திசைகளிலும் புல் ஷாட்டை அடித்து அசத்தினார்.
ரோகித் சர்மா ஃபார்மில் இருக்கிறார் என்பதை புல் ஷாட் மூலமாக தெரிந்துகொள்ள மாட்டேன். புல் ஷாட் ஆடிய பின் கவர் திசையின் இடதுகை பக்கம் அசால்ட்டாக ஒரு பவுண்டரி விளாசுவார். அப்படியான பவுண்டரியை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பார்த்தேன். அதனால் தான் கூறுகிறேன், உலகக்கோப்பையில் ஒரு மிகப்பெரிய இன்னிங்ஸ் ரோகித் சர்மாவிடம் இருந்து வரும். அதற்கேற்றாற் போல் கொல்கத்தாவில் போட்டிகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.