கொல்கத்தா: 4 ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தா அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடிய கோலி, 58 பந்துகளில் சதம் விளாசி அசத்தி இருந்தார். இதனால் உச்சக்கட்ட ஃபார்மில் உள்ள விராட் கோலி மீண்டும் சதம் விளாசுவார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கவுள்ள 9வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடுகிறது. 4 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா மண்ணில் ஐபிஎல் தொடர் நடக்கவுள்ளதாக ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியை காண கேகேஆர் உரிமையாளர் ஷாரூக் கான் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொல்கத்தா மைதானத்தில் நீண்ட நாட்களுக்கு பின் விராட் கோலி விளையாடுவதை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். கடந்த போட்டியில் பெங்களூருவில் களமிறங்கிய விராட் கோலி, மும்பை அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஆர்ச்சரையே இறங்கி வந்து சிக்சர் அடித்தார். அதுமட்டுமல்லாமல் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆர்ச்சர் பந்துவீச்சில் மட்டும் கடந்த போட்டியில் 28 ரன்கள் சேர்த்து அனைவரையும் மிரள வைத்தார்.
ஆர்சிபி அணியுடனும், ஆர்சிபி ரசிகர்களுடனும் அதிக பிணைப்பு கொண்டுள்ள விராட் கோலி, மனதளவில் கூடுதல் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். இதனோடு ஐபிஎல் தொடர் ரசிகர்கள் முன்னிலையில் 4 ஆண்டுகளுக்கு பின் நடப்பதால், விராட் கோலியின் ஆட்டம் பீஸ்ட் மோடுக்கு சென்றுள்ளது. விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களின் எனர்ஜிக்கு மைதானத்தின் ரசிகர்களும் இன்னொரு காரணம் என்று பலரும் கூறி வந்தது நிஜம் தான் என்று இப்போது பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த முறை விராட் கோலி கொல்கத்தா மைதானத்தில் களமிறங்கிய போது எவ்வளவு ரன்கள் அடித்தார் என்ற கேள்விக்கு, ரசிகர்களிடையே ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடிய போட்டியில் விராட் கோலி 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அந்தப் போட்டியில், 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி அடுத்த 18 பந்துகளில் கியரை மாற்றி சதத்தை எட்டினார்.

இதனால் 4 ஆண்டுகளுக்கு முன் என்ன ஃபார்மில் விராட் கோலி இருந்தாரோ, அதே ஃபார்மில் இருப்பதால் மீண்டும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலியை பார்க்க கொல்கத்தா ரசிகர்கள் விமான நிலையம், பயிற்சி கூடம் என்று குவிந்தனர். இதனால் கங்குலிக்கு பின் கொல்கத்தாவில் அதிக ரசிகர்களை கொண்ட வீரராக விராட் கோலி இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.