பெங்களூரு: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி நட்சத்திர விராட் கோலி 35 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் 13 அணிகளுக்கு எதிராக அரைசதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
16வது சீசனுக்கான 15வது லீக் போட்டியில் டூ பிளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணி சார்பாக விராட் கோலி - டூ பிளஸிஸ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

அதேபோல் லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் யாரும் எதிர்பாராத வகையில் உனாத்கட்டை வைத்து தொடங்கி இருந்தார். விராட் கோலிக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பிரச்சனை இருப்பதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் முதல் ஓவரில் நிதானம் காட்டிய விராட் கோலி, அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடியை தொடங்கினார். க்ருணால் பாண்டியா வீசிய ஓவரில் சிக்சரை விளாச, லக்னோ அணி புயல் வேக பந்துவீச்சாளர் மார்க் வுட்டை அட்டாக்கில் கொண்டு வந்தது.
அவருக்காகவே காத்திருந்த விராட் கோலி, மார்க் வுட் வீசிய முதல் ஓவரிலேயே பவுண்டரி மற்றும் சிக்சரை விளாசி ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் பெங்களூரு அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 56 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து நிதானம் காட்டிய விராட் கோலி 35 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். லக்னோ அணிக்கு எதிராக அரைசதம் விளாசியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 13 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அரைசதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இதுவரை ஷிகர் தவான், கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் 12 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்ததே சதனையாக இருந்தது. அதனை விராட் கோலி முறியடித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 2 அரைசதங்கள் விளாசி அசத்தியுள்ளார். அரைசதத்திற்கு பின் அதிரடியாக ஆடிய அவர், 44 பந்துகளில் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.