அடுத்தடுத்து சாதனை.. ஃபீல்டிங்கிலும் வரலாறு படைத்த விராட் கோலி.. 2வது இந்தியர் இவர்தானாம்!
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி புதிய வரலாற்றை படைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதனால் முதல் இன்னிங்ஸில் 480 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

4வது டெஸ்ட் போட்டி
ஏற்கனவே இரண்டு நாட்கள் முடிந்துவிட்ட சூழலில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது. பேட்டிங்கிற்கு சாதகமான களம் என்பதால் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும். குறிப்பாக விராட் கோலி இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது சதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

கோலியின் கேட்ச்
இந்நிலையில் பேட்டிங் செய்வதற்கு முன்னதாகவே விராட் கோலி பிரமாண்ட சாதனை படைத்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் ஆஸ்திரேலியாவின் நாதன் லையன் விக்கெட்டை பறிகொடுத்தார். பவுண்டரிக்கு விரட்ட முயன்ற போது விராட் கோலியின் கைக்கு பந்து சென்றது.

புதிய சாதனை
இந்த கேட்ச்-ன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச்-களை பிடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் 300 கேட்ச்-களை பிடித்திருக்கிறார். இதற்கு முன்னர் ராகுல் டிராவிட் தான் 334 கேட்ச்-களை பிடித்து சாதனை படைத்திருந்தார்.

சர்வதேச புள்ளிவிவரம்
சர்வதேச அளவில் அதிக கேட்ச்-களை பிடித்த வீரர்கள் பட்டியலில் இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே 440 கேட்ச்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 364 கேட்ச்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். விராட் கோலி 300 கேட்ச்-களுடன் 7வது இடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications