ட்ரினிடாட்: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 5வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்துள்ளது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விராட் கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தப் போட்டியின் களமிறங்கியதன் மூலம் விராட் கோலி 500 சர்வதேச போட்டிகளில் விளையாடிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அதேபோல் 500வது போட்டியில் களமிறங்கிய வீரர்களில் இதுவரை ஒருவர் கூட அரைசதம் கூட அடித்ததில்லை. இதன் மூலம் விராட் கோலி 500வது போட்டியில் அரைசதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் 6வது இடத்தில் இருந்த விராட் கோலி, ஐந்தாவது இடத்தில் இருந்த காலிஸ் சாதனை முறியடித்துள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் 73 ரன்களை கடந்த போது விராட் கோலி இந்த சாதனையை படைத்தார். விராட் கோலிக்கு முன் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடனும், இலங்கை ஜாம்பவான் சங்கக்காரா 28,016 ரன்களுடனும் முதல் இரு இடங்களில் உள்ளனர். அதன்பின் 3வது இடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 27,483 ரன்களுடன், 4வது இடத்தில் இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே 25,957 ரன்களுடனும் உள்ளனர்.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30வது அரைசதத்தை விளாசியதன் மூலம் விராட் கோலியின், டெஸ்ட் பேட்டிங் சராசரி 49ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக விராட் கோலியின் டெஸ்ட் சராசரி 50க்கும் கீழாக குறைந்துகொண்டே வந்த நிலையில், முதல்முறையாக 50ஐ நெருங்கி வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டாம் நாள் ஆட்டத்தில் விராட் கோலி நிச்சயம் 76வது சதத்தை விளாசுவார் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.