டோமினிக்கா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அரை சதத்தை பதிவு செய்தார்.
டோமினிக்காவில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு 10 விக்கெட்களையும் இழந்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர். இதில் ரோகித் சர்மா 103 ரன்களில் ஆட்டம் இழக்க மூன்றாவது வீரராக களம் இறங்கிய சுப்மன் கில் 6 ரன்களில் வெளியேறினார். இதனை அடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஜோடி பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் விராட் கோலி நிதானமாக விளையாடி 147 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதில் வெறும் இரண்டு பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். இதன் மூலம் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதன்படி வெளிநாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.
இதற்கு முன்பு டிராவிட்டும், கோலியும் 87 முறை அரை சதம் அடித்திருந்த நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் எதிராக கோலி அரை சதம் கடந்ததன் மூலம் விராட் கோலி தற்போது டிராவிட்டை முந்தியிருக்கிறார்.
முதல் இடத்தில் 96 முறை அரை சதம் அடித்து சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்திலும், விராட் கோலி இரண்டாவது இடத்தில் 88 முறையும் டிராவிட் மூன்றாவது இடத்தில் 87 முறையும் ,ரோகித் சர்மா 59 வது முறை அரைசதம் அடித்து நான்காவது இடத்திலும் கங்குலி 59 முறை அரைசதம் அடித்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்கள்.இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி அடித்த 29 ஆவது அரைசதமாகும்.