ஜமைக்கா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது மிகவும் திருப்தியாக உள்ளதென்று, கேப்டன் விராட் கோஹ்லி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு, இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டது. 17 நாட்களாக, அந்நாட்டில் தங்கியிருந்து, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வந்தது.
இதுவரை நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில், 3க்கு 1 என்ற கணக்கில், இந்தியா வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், தொடரை கைப்பற்றியது பற்றி, கேப்டன் விராட் கோஹ்லி கருத்துக் கூறியுள்ளார்.
" வொயிட் வாஷ் முறையில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், எதிர்பார்த்த முறையில் வொயிட் வாஷ் வெற்றி பெற முடியவில்லை. அதேசமயம், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 3க்கு 1 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியுள்ளோம்.
இந்த தொடரை கைப்பற்றியது, மனதிற்கு மிகவும் நிறைவாக உள்ளது. ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரில் தோல்வியை சந்தித்த நிலையில், இந்திய வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த வெற்றி ஆறுதலாக இருக்கும் என்று, விராட் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.