மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப இருக்கிறார். விராட் கோலி கடந்த சில மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடுமையாக தடுமாறி வருகிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளின் மொத்தமாகவே விராட் கோலி 93 ரன்கள் சேர்த்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில், விராட் கோலி ஒரு சதம் உள்ளிட்ட மொத்தமாக 190 ரன்கள் தான் எடுத்தார்.

இதனால் விராட் கோலி மீது கடும் விமர்சனம் இருந்தது. குறிப்பாக விராட் கோலி ஆப் சைடுக்கு வெளியே செல்லும் பந்தை அடித்து ஒரே மாதிரி ஆட்டமிழந்து வந்ததும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் ரோகித் சர்மா, கில், ரிஷப் பண்ட் உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் ரஞ்சி போட்டிக்கு திரும்பிய நிலையில், விராட் கோலி வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி சார்பாக விளையாட இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது மும்பையில் விராட் கோலி சஞ்சய் பங்கருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த பயிற்சி முகாமில் சஞ்சய் பங்கர் விராட் கோலிக்கு பேட்டிங் நுணுக்கங்களையும் ஆப் சைடு செல்லும் பந்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாக சஞ்சய் பங்கர் இருந்தார். 2014 ஆம் ஆண்டு முதல் 19 ஆம் ஆண்டு வரை விராட் கோலியுடன் அவர் பணியாற்றினார். விராட் கோலி தன்னுடைய பேட்டிங் வெற்றிக்கு சஞ்சய் பங்கரை பலமுறை காரணமாக தெரிவித்து இருந்திருக்கிறார்.
சஞ்சய் பங்கர் இந்திய அணியிலிருந்து வெளியேறிய பிறகு விராட் கோலியும் ஆர் சி பி அணியில் இணைந்தார். இந்த சூழலில் தான் தற்போது பேட்டிங்கில் தான் தடுமாறி வரும் நிலையில் சஞ்சய் பங்கருடன் இணைந்து மும்பையில் அவர் பயிற்சி செய்து வருகிறார். ரயில்வே அணிக்கு எதிரான ரஞ்சி போட்டி 30ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதி வரை நடைபெறும். அதன் பிறகு இந்திய அணி வரும் ஆறாம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடும். இதனை தொடர்ந்து இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக துபாய் செல்கிறது.