பெங்களூரு : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், முன்னாள் கேப்டன் கங்குலியும் வெளிப்படையாகவே மோதிக் கொள்வது கிரிக்கெட்ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டெல்லி, பெங்களூரு அணிகள் மோதியது.
இதில் போட்டி முடிந்த பிறகு, கங்குலியும், விராட் கோலியும் கை கொடுத்து கொள்ளாமல் போனார்கள். இது நடுநிலை கிரிக்கெட் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்தது. மேலும் கோலி ரசிகர்கள், இந்திய அணியின் ஜாம்பவனாக இருந்த கங்குலியை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்தப் போட்டியின் போது விராட் கோலிக்கும், கங்குலிக்கும் உண்மையிலேயே விரிசல் இருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில், எல்.கே.ஜி. குழந்தை போல், நீ என் பொருளை எடுத்து கொண்டாய், நான் உன்னிடம் இனி பேச மாட்டேன் என்பது போல் இன்ஸ்டாகிராமில் கங்குலியை பின் தொடர்வதை கோலி நிறுத்தி கொண்டார்.
இது சலசலப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு முறை கூட, விராட் கோலி ஐசிசி கோப்பையை வங்கவில்லை என்பதால் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டிலிருந்து கேப்டன் பதவியை கோலியிடமிருந்து மாற்றினார். பல வாய்ப்புகளை கோலி வீணடித்த பிறகு தான் இந்த மாற்றமே நிகழ்ந்துள்ளது.

ஆனால், இந்த உண்மையை கோலியும், கோலி ரசிகர்களும் புரிந்து கொள்ளாமல் ஏதோ கங்குலி அவரை தண்டித்து விட்டதாக நினைத்து புலம்புகிறார்கள். 3 ஐசிசி கோப்பையை வென்ற தோனியே, பதவியை ராஜினாமா செய்த போது, ஒரு கோப்பையை கூட வாங்காத கோலி, விளையாடும் வரை கேப்டனாக இருக்க வேண்டும் என்று நினைப்பது நியாயமா என்று கங்குலி ரசிகர்கள் பதிலடி தந்துள்ளனர்.