கேப் டவுன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்து வீசி 55 ரன்கள் சுருட்டி இருக்கிறது. இது மிகப்பெரிய உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சாதனையை கொண்டாடாமல் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் ட்விட்டரில் அடித்துக் கொண்டு வருகிறார்கள்.
இதற்குக் காரணம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததன் மூலம் கேப்டன் பதவி விராட் கோலிக்கு வரப்போகிறது என்ற ஆசையில் அவரது ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில் ரோகித் சர்மாவின் அபார செயல்பாட்டால் இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஒரு அணியின் மூத்த வீரர் என்ற காரணத்தால் விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் பல யுக்திகளை மேற்கொண்டார். ரோகித் சர்மாவுக்கு ஒரு நல்ல ஆலோசகராக விளங்கினார். மேலும் முகமது சிராஜின் விக்கெட் பிளான் போட்டு கொடுத்தது விராட் கோலி தான். இதை எல்லாம் காரணம் காட்டி விராட் கோலி ரசிகர்கள் லீடர் விராட் கோலி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரோகித் சர்மா மட்டும் என்ன தக்காளி தொக்கா என்ற யோசித்த ரோகித் ரசிகர்கள் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா எவ்வாறு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார் என்று பதிவுகளை போட்டு வருகின்றனர். இதற்கு அவர்கள் கேப்டன் ரோகித் சர்மா என்று ஹேஷ்டேக்கை வைத்திருந்தார்கள். இதனால் இந்திய அளவில் ட்விட்டரில் லீடர் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா என்ற ஹேஷ்டேக்குகள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில் கேப்டனை மாற்றலாம் என்று நினைத்த நிலையில் ரோகித் சர்மா தற்போது சிறப்பாக செயல்பட்டது ஆறுதலை தந்தாலும் விராட் கோலி வீரராகவே இவர் சிறப்பாக யோசனைகளை வழங்குகிறார் என்று கிரிக்கெட் வல்லுனர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதனால் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற தலைவலி தற்போது பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.
ரோஹித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையே நல் உறவு இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் விஜய் அஜித் ரசிகர்கள் போல் மோதிக் கொண்டு வருகின்றனர். இரு தரப்பினரும் கேப்டன் விவகாரத்தில் தங்களுக்கு சாதகமாக முடிவெடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.