விசாகப்பட்டினம்: 2027 உலகக்கோப்பைக்கு முன்பாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை ஒருநாள் அணியில் இருந்தும் ஓரம் கட்ட நினைத்த தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கருக்கு, தங்களது ருத்ர தாண்டவ ஆட்டத்தின் மூலம் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் இந்திய சீனியர்கள்.
குறிப்பாக, இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் 'தொடர் நாயகன்' விராட் கோலி, 2025-ம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்று தனது பழைய ஃபார்முக்கு திரும்பியதை நிரூபித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியது. ஆனால், இந்த தொடருக்கான கோப்பையை விட ரசிகர்கள் கொண்டாடுவது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஃபார்மைத்தான்.
கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு, டெஸ்ட் மற்றும் டி20-யில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சீனியர்கள் ஓரங்கட்டப்பட்டனர். விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தனர். அதே பாணியில் ஒருநாள் போட்டிகளிலும் அவர்களை நீக்கிவிட்டு, 2027 உலகக்கோப்பைக்கு புதிய அணியை உருவாக்கத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், ராஞ்சி, ராய்ப்பூர் மற்றும் விசாகப்பட்டினம் என மூன்று மைதானங்களிலும் ரோஹித் மற்றும் கோலி காட்டிய அதிரடி, அந்தத் திட்டத்தை தவிடுபொடியாக்கியுள்ளது.
இந்தத் தொடரில் விராட் கோலி வெளிப்படுத்திய புள்ளிவிவரங்கள் இளம் வீரர்களை மிரள வைக்கும் வகையில் உள்ளது. இந்த தொடரில் விராட் கோலி மூன்று போட்டிகளில் எடுத்த ரன்கள் 302 ஆகும். இதன் சராசரி - 151, ஸ்ட்ரைக் ரேட் - 117.05.
மூன்று போட்டிகளில் இரண்டு சதங்கள், ஒரு அரைசதம் எனத் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய கோலி, தான் ஏன் ஒருநாள் கிரிக்கெட்டின் ராஜா என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
இளம் வீரர்கள் தான் எதிர்காலம் என்று நிர்வாகம் பேசிக்கொண்டிருக்க, 2025-ம் ஆண்டில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடம்பிடித்திருப்பவர்கள் ரவி சாஸ்திரி சொன்னது போல இந்த "தாத்தாக்கள்" தான். விராட் கோலி - 651 ரன்களும் (13 இன்னிங்ஸ்), ரோஹித் சர்மா - 650 ரன்களும் (14 இன்னிங்ஸ்) குவித்துள்ளனர்.
வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் கோலி முதலிடத்திலும், ரோஹித் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இவர்களுக்குப் பின்னால்தான் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற பிற வீரர்கள் உள்ளனர்.
"இவர்களை அணியை விட்டு நீக்கினால் இந்திய அணிக்குத்தான் இழப்பு. கம்பீர் மற்றும் அகர்கர் இனியாவது இவர்களைச் சீண்டாமல் இருக்க வேண்டும்" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்தத் தொடர் வெற்றி மூலம், சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக்கோப்பை கனவு ரோஹித் - கோலி கைகளில் பாதுகாப்பாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.