மும்பை : வரும் 2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர் யார் என்பதை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கணித்துள்ளார். ஆசிய கோப்பை, உலகக்கோப்பை என தொடர்ந்து கிரிக்கெட் தொடர்கள் நடைபெற இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் உலக கோப்பையில் இம்முறை அதிக ரன்கள் அடிப்படும் என்று ஷேவாக் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் இந்தியாவின் ஆடுகளம் ரன் குவிப்பிற்கு சாதகமாக இருக்கிறது.

எனவே தொடக்க வீரராக களமிறங்க கூடியவர்கள் அதிக ரன்களை அடிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் நான் ஏதேனும் ஒரு வீரரை குறிப்பிட வேண்டும் என்றால் நான் ரோகித் சர்மாவின் பெயரை தான் சொல்வேன். அதிக ரன்கள் அடிக்க வாய்ப்பு இருக்கும் வீரர்கள் பட்டியலில் என் மனதில் மேலும் இரண்டு பெயர்கள் வருகிறது. ஆனால் நான் ஒரு இந்தியன் என்பதால் ரோஹித் சர்மாவை தான் தேர்வு செய்வேன்.
உலகக்கோப்பை வரும்போது எல்லாம் ரோகித் சர்மாவின் சக்தி அதிகரிக்கும்.அவருடைய செயல்பாடும் வேற லெவலில் இருந்திருக்கிறது. இம்முறை அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மேலும் அவர் கேப்டனாக உலகக்கோப்பை தொடரில் களமிறங்குகிறார் எனவே இது நிச்சயம் அவருடைய செயல்பாட்டில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
இதனால் ரோகித் சர்மா இம்முறை அதிக ரன்கள் அடிப்பார் என்று ஷேவாக் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தான் அதிக ரன்கள் அடித்திருந்தார். அவர் ஒன்பது போட்டிகளில் விளையாடி 648 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஐந்து சதங்கள் அடங்கும். சராசரியாக 81 ரன்கள் அடித்து இருந்தார்.
இதே போன்ற ஒரு செயல்பாட்டை ரோகித் சர்மா வெளிப்படுத்தினால், அது நிச்சயம் இந்திய அணிக்கு சாதகமாக அமையும். இதேபோன்று ரோகித் சர்மாவுக்கு ஜோடியாக களமிறங்கும் கில் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விராட் கோலி கடந்த முறை உலகக்கோப்பை தொடரில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதற்கு இம்முறை விராட் கோலி பதில் சொல்லி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.