பெங்களூரு: அயர்லாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் பயணிக்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் விலகி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இன்று மற்றும் நாளை அடுத்தடுத்த டி20 போட்டிகள் நடக்கவுள்ளன.

இதன்பின்னர் அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ளது. அயர்லாந்து டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் டப்ளின் மைதானத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தத் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பின் நட்சத்திர வீரர் பும்ரா இந்திய அணிக்கு திரும்பவுள்ளதால், அயர்லாந்து தொடரில் பும்ரா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வருவதால், ராகுல் டிராவிட் தலைமையிலான குழுவினருக்கு சில வாரங்கள் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக அயர்லாந்து டி20 தொடருக்கு தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவரான விவிஎஸ் லக்ஷ்மண், பயிற்சியாளராக செயல்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியுடம் விவிஎஸ் லக்ஷ்மண் பயணிக்க போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் யாருடன் பயணிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவர்களுக்கு பதிலாக என்சிஏவில் உள்ள சிதான்ஷு கோடாக் மற்றும் சாய்ராஜ் உள்ளிட்டோர் பயணிக்க உள்ளனர். ஏற்கனவே என்சிஏவில் காயமடைந்த பும்ரா, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோருடன் நீண்ட மாதங்கள் செலவிட்டுள்ளதால், இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியை இவர்களால் சமாளிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.