மும்பை: பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் அமைத்ததற்காக மும்பை வான்கடே ஸ்டேடிய ஊழியர் சுதிர் நாயக்கிடம், இந்திய கிரிக்கெட் அணி இயக்குநர் ரவி சாஸ்திரி வாக்குவாதம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 5வது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் 3 பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தனர். மொத்தம் 438 ரன்கள் குவித்தது அந்த அணி.

இப்போட்டியில் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பரிதாபமாக தோற்றது. பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாகவே திகழ்ந்தது வான்கடே பிட்ச். பந்து வீச்சாளர்களால் எதையுமே செய்ய முடியவில்லை.
இதனால் கோபமடைந்த இந்திய அணி இயக்குநர் ரவி சாஸ்திரி, மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் அருண் ஆகியோர், பிட்ச் பராமரிப்பாளர் சுதிர் நாயக்கிடம் கடும் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சுதிர் நாயக், மும்பை கிரிக்கெட் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். தன்மீதான குற்றச்சாட்டை ரவி சாஸ்திரி மறுத்துள்ளார்.