கொழும்பு: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிக்க விரும்புவதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் நிலையில், கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்த பேச்சுகள் அதிகரித்திருந்தன. ஆனால் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் 5 சிக்சர்கள் உட்பட அரைசதம் விளாசி தனது பேட்டிங்கை ஃபார்மை அனைவருக்கும் நிரூபித்தார் ரோகித் சர்மா. அதுமட்டுமல்லாமல் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இதுவரை 246 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 9,922 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் அடுத்தப் போட்டியில் ரோகித் சர்மா 10 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா இன்னொரு சாதனையையும் படைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா பேசுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிக்க விரும்புகிறேன். ஒருநாளும் என் வாழ்வில், ஏன் கனவில் கூட கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிப்பேன் என்று நினைத்ததில்லை. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை போல் அதிக பலம் கொண்ட வீரர் நான் அல்ல. ஆனால் பந்தை பலமாக விளாசுவது மிகவும் பிடிக்கும்.
நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது, டைமிங் மிக முக்கியம் என்று அறிவுறுத்தப்பட்டேன். அதேபோல் பெரிய ஷாட்களை விளையாடக் கூடாது என்பார்கள். சிறு வயது முதலே பேட்டை உடலுடன் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும், பந்தை தரையோடு தரையாக அடிக்க வேண்டும் என்றே பயிற்சி செய்திருக்கிறேன். ஒருவேளை தப்பித் தவறி கூட பெரிய ஷாட்களை விளையாடினால், அன்றைய போட்டியில் இருந்து பயிற்சியாளர்கள் எங்களை நீக்கிவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் 553 சிக்சர்களையும், ரோகித் சர்மா 539 சிக்சர்களையும் விளாசியுள்ளனர். ரோகித் சர்மாவுக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருந்து வரும் சூழலில், அதற்கேற்ப பயிற்சிகளை முடுக்கிவிட்டுள்ளார் ரோகித் சர்மா. பாகிஸ்தான் அணிக்கு எதிராக போட்டியில் ஷாகின் அப்ரிடியிடம் போல்டான நிலையில், அடுத்த போட்டியில் அவரை எதிர்கொள்ள சரியான திட்டத்துடன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.