அகமதாபாத்: 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது எனது நீண்ட நாள் தோழியான ஜெயாவிடம் மைதானத்தில் வைத்து காதலை வெளிப்படுத்தியதற்கு சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியே காரணம் என்று தீபக் சஹர் தெரிவித்துள்ளார்.
சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர். மெகா ஏலத்தில் தீபக் சஹருக்கு ரூ.14 கோடி கொடுத்து சென்னை அணி அவரை மீண்டும் வாங்கியது. நடப்பு சீசனில் காயம் காரணமாக முதல் பாதி போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், 9 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் சென்னை அணிக்கு தேவையான விக்கெட்டுகளை வீழ்த்தி தீபக் சஹர் அசத்தி வருகிறார்.

சிஎஸ்கே வீரர் தீபக் சஹர் கடந்த 2021ஆம் ஆண்டு மைதானத்தில் வைத்து தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடன் காதலை வெளிப்படுத்தினார். அன்றைய நாளில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தாலும், காதலில் வெற்றிபெற்று தீபக் சஹர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து தீபக் சஹர் பேசியுள்ளார்.
அதில், 2021ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பிறகே எனது தொழி ஜெயா பரத்வாஜிடம் காதலை வெளிப்படுத்தலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பிளே ஆப் சுற்றுக்கு முன்பாகவே காதலை வெளிப்படுத்திட கேப்டன் எம்எஸ் தோனியே அறிவுறுத்தினார். இல்லையென்றால் என் கவனம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று பார்த்தார். அதனால் குவாலிஃபையர் போட்டிக்கு முன்பாகவே ஜெயாவிடம் காதலை வெளிப்படுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து எம்எஸ் தோனியுடனான நட்பு குறித்து தீபக் சஹர் பேசுகையில், எம்எஸ் தோனியுடன் நெருக்கமாக இருக்கும் நபர்களில் நானும் ஒருவன். நாங்கள் எப்போதும் ஒன்றாகவே அமர்வோம். கார், விமானம் என்று எங்கு பார்த்தாலும் நாங்கள் இருவரும் ஒன்றாகவே அமர்ந்திருப்போம். என்னிடம் செல்லமாக அதிகமாக விளையாடுவார் என்று தெரிவித்தார். தீபக் சஹரின் காதலுக்கு எம்எஸ் தோனி உதவியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.